இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி... மதுரை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
Recommended Video
மதுரை: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக, மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 250 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். இது போன்ற தாக்குதல் நடைபெறகூடும் என ஏற்கனவே தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில், தாக்குதல் நடந்துள்ளது.
இலங்கை தாக்குதலின் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட ரயில்நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் இணை இயக்குனர் ஜெகநாதன் மற்றும் தென்னக ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்நிலையத்திற்கு வருகைதரும் அனைத்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம், ரயில் நிலையத்திற்கு வருகை தரும் அனைத்து ரயில்களிலும், முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இதேபோன்று, மதுரையில் மக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகபடும் படியான நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க ரயில்நிலையம் முழுவதிலும் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா காட்சிகள் கண்காணிக்கப்பட்டு வரப்படுகின்றன.