கோவில் நிலத்தில்.. அதிமுக மாஜி அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள் கட்டிய காம்ப்ளக்ஸ்.. இடித்து தள்ளிய அரசு
மதுரை: சிவகங்கையில், முன்னாள் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள் ஆக்கிரமித்த கோவில் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டுள்ளது .
சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவிரி பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர் 8 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் சர்வே எண் 335 மற்றும் 330 ஆகியவற்றில் உள்ள சுமார் 9 ஏக்கர் 58 சென்ட் நிலத்தை முன்னால் கதர் கிராம தொழில்கள் வாரியத் துறை அமைச்சராக இருந்த பாஸ்கரன் உறவினர்கள் போலியாக பத்திரம் தயார் செய்து ஆக்கிரமித்தது கம்பி வேலி அமைத்தனர்.
அந்த இடத்தின் ஒருபகுதியில் வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டதால், அந்த இடத்தை மீட்க வேண்டும், வணிக வளாக கட்டிடப் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை திமுக நகரச் செயலாளர் துரை ஆனந்த் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார்.
சிவகங்கை மாவட்ட திமுக, துணை செயலாளர் சேங்கன்மாறன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், சிவகங்கை கவுரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆக்கிரமித்தும், அதில் வணிக வளாகம் கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் . கட்டிடத்தை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜூன் 28ம் தேதி வெளியிட்ட உத்தரவில், அறநிலையத் துறை நோட்டீஸ் படி ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடத்தை அகற்றிக் கொள்ள வேண்டும் , இல்லாவிட்டால் அறநிலையத்துறை சார்பில் கட்டடத்தை அகற்றி விட்டு அதற்கான செலவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை 12 வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் .
இதையடுத்து நேற்று காலை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையில் வணிக வளாக கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது. மொத்தமுள்ள மூன்று கட்டிடங்களில், ஒரு கட்டிடம் 3 தளங்களுடன் மற்றவை இரண்டு தளங்களும் பில்லர் அமைக்கும் பணி முடிந்து காங்கிரீட் மட்டும் போடப்பட்டிருந்தது.
ஜேசிபி எந்திரம் மூலமாக மூன்று கட்டிடங்களையும் இடிக்கும் பணி, சுமார் 2 மணி நேரம் நடந்தது. அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. அப்போது சிவகங்கை ஆர்டிவோ, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். சிவகங்கை டிஎஸ்பி , பால் பாண்டி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.