இப்படி மட்டும் பண்ணிடாதீங்க.. தான பத்திரம் உடனே ரத்தாகும்.. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவை பாருங்க
மதுரை: பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு, பெற்றோர் தானமாக எழுதி கொடுத்த சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பெற்றோரை பராமரிக்காவிட்டால், அவர்களின் மகன் அல்லது மகன்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு மீண்டும் பெற்றோர்களிடமே ஒப்படைப்பது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. பெற்றோரிடம் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சொத்துக்களை பறிக்கும் மகன் அல்லது மகள்கள், பின்னாளில் அவர்களை பராமரிக்காமல் துரத்திவிடுவது நடக்கிறது.

ஆனால் இவர்களை காப்பதற்காகவே முதியோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதியோர்கள் இறுதி காலங்களில் நிம்மதியாகவும், வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகவும் முதியோர்களுக்கு சட்டம் இருக்கிறது. இந்த சட்டப்படி, மகன்களுககு தானமாக எழுதி கொடுத்த சொத்து பதிவை பெற்றோர் திரும்ப பெற முடியும். இந்த நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர்களே எடுக்க முடியும். சில நேரங்களில் நீதிமன்ற உத்தரவுகளின்படியும் கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்துள்ளது.
மதுரை திருமங்கலம் டவுன் பகுதியை சேர்ந்த ரவணப்பசாமி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மகன் தன்னை பராமரிக்காதது குறித்து குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவில், ரவணப்பசாமி கூறுகையில், " என் பெயர் ரவணப்பசாமி, எனக்கு ஒரு மகன், 3 மகள்கள் இருக்கிறார்கள். கடந்த 2012-ம் ஆண்டில் டி.குன்னத்தூரில் உள்ள எங்கள் பூர்வீக சொத்துகளை நானும், எனது மனைவியும் சேர்ந்து என் மகன் வெங்கிடசாமிக்கு தானமாக எழுதிக்கொடுத்துவிட்டோம். எங்களை நல்லமுறையில் கவனித்துக்கொள்வதாக என் மகன், உறுதி அளித்து இருந்ததால் சொத்தை தானமாக எழுதி கொடுத்தோம். ஆனால் என் மகன் சொன்னபடி எங்களை கவனிக்கவில்லை.
எனக்கும் என் மனைவிக்கும் 10 ஆண்டுகளாக சிறு உதவி கூட செய்யவில்லை. கடந்த ஆண்டு என் மனைவி இறந்து விட்டார். அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்கு கூட என் மகன் நேரில் வரவில்லை. இந்தநிலையில் எங்கள் பூர்வீக சொத்துகளை வீட்டுமனைகளாக மாற்றி அவர் விற்பனை செய்கிறார். இதுசம்பந்தமாக உசிலம்பட்டி தாசில்தாரிடம் புகார் அளித்திருந்தேன்.

அப்போது என் மகன் வெங்கிடசாமி, எனக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், 2 பிளாட்டுகளும் தருவதாக கூறி புகாரை வாபஸ் பெறச்செய்தார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே எங்கள் பூர்வீக சொத்துகளை வெங்கிடசாமிக்கு தானமாக வழங்கியதை ரத்து செய்யும்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் தான செட்டில்மென்டை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" இவ்வாறு ரவணப்பசாமி தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர்கள் திருமங்கலம் சுந்தர், முத்துமாரி ஆகியோர் ஆஜராகி, சொத்துகளை தானமாக பெற்றுக்கொண்டு பெற்றோரை பராமரிக்காத மகனின் சொத்து பதிவை முதியோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் மனுவை மதுரை மாவட்ட கலெக்டர் பரிசீலித்து 8 வாரத்தில் சொத்து பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications