கொடுமை.. திருமணமாகி 15 நாள்தான் ஆச்சு.. கூப்பிட்டு விட்ட போலீஸ்.. தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்
மதுரை: சாத்தான்குளம் சம்பவம் மறையும் முன்பே சாப்டூர் அருகே காதல் திருமணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இளைஞரின் மரணத்திற்கு காவல்துறையினர்தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியதோடு பலமணி நேரம் போராட்டத்தில் ஈடுபடவே, சாப்டூர் காவல்நிலைய எஸ்ஐ உள்பட 4 காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்நிலைய விசாரணைக்கு போய் மர்மமான முறையில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் பெயர் ரமேஷ் என்பதாகும். இவர் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சாப்டூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். உயிரிழந்த ரமேஷின் அண்ணன் இதயக்கனி 25 என்பவருக்கும் அதே கிராமத்தைச் சார்ந்த புனிதா என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது
பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட இருவரும் கிராமத்தை விட்டு வெளியேறவே, புனிதாவின் பெற்றோர்கள் மகளை காணவில்லை என்று சாப்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து இதயக்கனியின் வீட்டிற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதயக்கனியின் தம்பி ரமேஷை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

தூக்கில் தொங்கிய இளைஞர்
விசாரணைக்கு போன ரமேஷ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் பெற்றோர் ரமேஷை தேடி காவல்நிலையத்திற்கு சென்ற போது ரமேஷை இரவே வீட்டிற்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ரமேஷை பல இடங்களில் பெற்றோர் தேடிய நிலையில் வீட்டின் அருகில் இருந்த மலைமீது இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ரமேஷ் உடலை கண்டுபிடித்தனர்

காவல்துறையினர் மீது புகார்
பதறிப்போன பெற்றோரும் கிராமத்தினரும் போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர்தான் தனது மகன் ரமேஷை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக குற்றம் சாட்டினர். காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு கைது செய்யும் வரை உடலை எடுக்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் போராட்டம்
சாப்டூர் காவல்நிலைய எஸ்ஐ ஜெயக்கண்ணன் உட்பட 5 காவல்துறையினர் தனது மகனை அடித்து கொன்று விட்டதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். போராட்டம் பலமணிநேரம் நீடிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த
மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கொலை செய்து விட்டனர்
ரமேஷின் அண்ணன் சந்தோஷ், எஸ்பியிடம் பேசும் போது, எங்களை அடிக்கடி சாப்டூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து என்னையும், எனது அம்மாவையும் அடித்தனர். எனது தம்பி ரமேஷை விசாரணை என்ற பெயரில் போலீசார் அடித்து கொலை செய்து விட்டனர் என்று புகார் மனு அளித்தார்.

4 போலீசார் மீது வழக்குப்பதிவு
புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ரூ.25 லட்சம் இழப்பீடு தரவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து சாப்டூர் எஸ்ஐ ஜெயக்கண்ணன் உட்பட 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட எஸ்பி சுஜித்குமார் செய்யப்பட்டது.

சாத்தான்குளம் சம்பளம்
இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது. ரமேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கல்லூரி மாணவன் மர்ம மரணம் தொடர்பாக சாப்டூர் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications