கபடி வீராங்கனைக்கு கொடூரம்! பிடி வாத்தியாரின் பாலியல் வக்கிரம்! குரு ஸ்தானம்.. குட்டு வைத்த ஹைகோர்ட்
மதுரை: விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசுக்கு பல்வேறு வழிமுறைகளை வகுத்து நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வெளியூர் செல்லும் மாணவிகளிடம் உடற்கல்வி ஆசியர்கள் போன்றோர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடியாக உரிய தண்டனை பெற்று தர தேவையான சட்டத் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் தமிழ்செல்வன். கடந்த 2018ல் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடந்தது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தனது பள்ளி மாணவிகளை ஆசிரியர் தமிழ்செல்வன் அழைத்து வந்திருந்தார். அப்போது ஒரு மாணவியை இரவு நேரத்தில் தங்குவதற்கு ஒரு விடுதிக்கு அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் கடந்த 2021ல் உடற்கல்வி ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில்," மனதாரருக்கு தண்டனை வழங்கிய உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
படிப்பையும், விளையாட்டை தொடர முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி இருப்பதால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
உடற்பயிற்சி ஆசிரியர் குரு, தந்தை ஸ்தானத்தில் இன்றி தன்னிடம் பயிலும் மாணவியிடம் தவறான நோக்கில் பாலியல் தொந்தரவு செய்த செயல் கண்டிக்கத்தக்கது. இனிமேல் விளையாட்டுத் துறையில் பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படாமல் இருக்க, தமிழக அரசு உரிய சட்டம் இயற்றவேண்டும். படிக்கும் இடங்களில் இருந்து விளையாட்டிற்காக வெளியில் செல்லும் போது மாணவிகளை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போது தான் அவர்களால் படிப்பையும், விளையாட்டையும் தொடர முடியும். எனவே, விளையாட்டுபோட்டிகளுக்காக மாணவிகள் வெளியூர் செல்லும் போது அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு செலவில் உடன் அழைத்துச் செல்லவும், விளையாட்டிற்காக செல்லும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடியாக உரிய தண்டனை பெற்றுத் தரவும் தேவையான சட்டத் திருத்தங்களை தலைமை செயலாளர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை 2025ம் ஆண்டு பிப்ரவரி 2ம் வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications