மதத்தை வைச்சு பிரச்சாரம் கூடாது.. கமல் மீது வழக்கு தொடர வாய்ப்பு.. ஜெயக்குமார் சூசகம்
Recommended Video
மதுரை: ஒரு மதத்தின் மீது கமல்ஹாசன் கூறிய கருத்து தவறானது என்றும் அவர் மீது வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் மதுரை வந்துள்ளார். இந்நிலையில் விளாச்சேரி பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "திமுகவும் அமமுகவும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆயிரம் ரூபாயும், தினகரன் ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்களை விலைக்கு வாங்குவதன் மூலம் வெற்றியை பெற்று விடலாம் என்று கனவு கண்டு இருக்கிறார்கள்.

கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள்
அதேபோன்று அமமுகவினர் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கொள்ளையடிக்கப்பட்ட வைரங்கள் அனைத்தையும் விற்று ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைக் கொண்டுவந்து இங்கு செலவிட்டாலும், ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்கும் திருப்பரங்குன்றம் தொகுதியை எவராலும் தொட்டுக்கூட பார்க்க இயலாது. ஜெயலலிதாவின் சாதனைகள் திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே கொண்டு சேர்க்கப் பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கமல் பேச்சு தவறு
திமுக மற்றும் தினகரன் அணி வெற்றிபெற்று விடலாம் என்று கனவு கண்டு இருக்கிறார்கள் அது எப்போதும் நிறைவேறாது. மதங்கள் தொடர்புடைய பிரச்சாரம் கண்டிக்கத்தக்கது. அதிலும் ஒரு மதத்தின் மீது கமல்ஹாசன் கூறிய கருத்து தவறானது. அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதுதான். எந்த சமுதாயமாக இருந்தாலும் அதிமுக அனைத்து மக்களையும் ஏற்றுக்கொண்டு செயலாற்றுகிறது. எவ்வித மத கலவரத்தை தூண்டும் விதமாக யார் எதைக் கூறினாலும் வேற்றுமையை மறந்து தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள்.

சட்டம் ஒழுங்கு
ஜெயலலிதாவின் அரசு சட்ட ஒழுங்கை பாதுகாத்து வந்ததை தொடர்ந்து இன்றளவும் நிறைவேற்றி வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு உட்பட்ட சட்டத்தின் அடிப்படையில் கமல்ஹாசன் பேச்சு எதிரானதாக இருந்தால் அவர் மீது நிச்சயமாக வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது. தேர்தல் நடைமுறை அமலில் உள்ள நிலையில் எந்த வழக்காக இருப்பினும் அதனை தேர்தல் ஆணையம் மட்டும்தான் விசாரிக்க முடியும்.

கொள்கை பிரச்சாரம்
கொள்கை மற்றும் லட்சியங்கள் மற்றும் மக்களுக்கு செய்யக் கூடிய நன்மைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை வைத்து பிரச்சாரம் செய்வது தான் நல்லது. வேறுவிதமாக ஜாதி மற்றும் மத முதலானவற்றை அவதூறாக பேசி பிரச்சாரத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

திமுக பச்சோந்தி
திமுகவை போன்ற சந்தர்ப்பவாத கட்சி எதுவுமே இருக்க முடியாது. பூனைக்கும் தோழன் என்ற பாலுக்கும் காவலன் என்ற பழமொழியின் அடிப்படையிலேயே தான் ஸ்டாலின் நிறத்தை மாற்றும் பச்சோந்தியை போன்று செயல்பட்டு வருகிறார். இதில் கில்லாடிகள் திமுகவினர்.சந்திரசேகரராவ் ஸ்டாலினை சந்தித்தது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.

ஒன்பது மாலுமிகள்
நம்பிக்கை இல்லாத தன்மையும் காரணமாகத்தான் 23ம் தேதிக்குப் பிறகு இது குறித்து விவரம் அறிவிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது சந்தேகத்திற்குரியது.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் என்ற நிலையில் தான் திமுக கூட்டணி இருக்கிறது. தொடர்ச்சியாக மக்களிடம்
அவப்பெயர் பெற்று வருகின்றனர்.13ம் தேதிக்குப் பிறகு திமுகவிற்கு மாற்றம் முன்னேற்றம் என்ற கேள்வி எழுப்பிய போது, அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கப் பெறும்" இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications