மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்.. மதமாற்ற முயற்சி நடக்கவில்லை என சிபிஐ தகவல்!
மதுரை: மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார் என்றும் அதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி அந்தப் பள்ளியில் படித்து வந்தார். அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி விடுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். விடுதி அலுவலர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மாணவியின் உடல்நிலை குறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். உடல்நிலை சரியில்லாமல் மாணவி தொடர்ந்து வாந்தி எடுத்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி 2022 ஜனவரி 19 ஆம் தேதி உயிரிழந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். அவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அழைத்ததாக மாணவி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி 2022 ஜனவரி 31 ல் உத்தரவிட்டது.
திருச்சி நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கு எதிராக விடுதி வார்டன் சகாயமேரி, மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று சிபிஐ மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பதில் அளித்துள்ளது.
பள்ளி மாணவி மரணம் வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்கு படிக்கும் லாவண்யாவை பிற வேலைகளை செய்ய அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது.
மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. எனவே குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கூடாது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இறந்துபோன மாணவி தரப்பு வாதத்திற்காக வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications