30 நாள் தான் டைம்! மெடிக்கல்கள் இதை கண்டிப்பா செய்யனும்.. இல்லைன்னா சிக்கல்தான்.. கலெக்டர் வார்னிங்
மதுரை: இன்று தொடங்கி வரும் 30 நாட்களுக்குள் மருந்தகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மதுரை ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் உள்ள மெடிக்கல்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக இதுபோன்ற போதை மாத்திரைகளை இளைஞர்களும், மாணவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுபோன்ற போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை பயன்படுத்தி போதையில் மிதக்கும் இளைஞர்களால் குற்ற சம்பவமும் மதுரையில் அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு போலீசாரும் போதை மாத்திரைகளையும் டானிக்குகளையும் விற்பனை செய்யும் மருந்தகங்களின் மீதும் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வந்தனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல மருந்தகம் ஒன்றில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை கடிதங்கள் இல்லாமலேயே நரம்பியல் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், அந்த மாத்திரைகளை கொண்டு இளைஞர்கள் போதை உணர்வுக்கு அடிமையாவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
போதை மாத்திரைகள்: அந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மருந்து ஆய்வாளர் குழுவினர் கடையில் அதிரடி சோதனை நடத்தி கடையில் இருந்த குறிப்பிட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளரையும் கைது செய்தனர். மதுரையில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில், மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலகு சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டன.
அதாவது, சிறுவர்கள் போதைக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் தான், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
சிசிடிவி கேமிரா: அதில், மதுரை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் மனநல சிகிச்சை சம்பந்தப்பட்ட மருந்துகள் எச்.எச்1 (Drugs) குறிப்பிட்டுள்ள மருந்து மாத்திரைகளை விற்பனை செய்யும் அனைத்து மெடிக்கல்களும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில் இன்று தொடங்கி வரும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கேமரா பொருத்துவது குறித்து கண்காணிக்க அதிகாரிகள் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications