ஆடி அசைந்து வரும் மீனாட்சி சொக்கநாதர் தேர்.. மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் உற்சாகம்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 11ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். ஆடி அசைந்து வரும் தேரை இழுக்கும் இளைஞர்கள் உற்சாக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாள் விழாவான ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. 9ஆம் நாள் (ஏப்ரல் 20) இரவு திக் விஜயம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளினர்.
முன்னதாக, அதிகாலை 4 மணி அளவில் கோயிலில் இருந்து வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினர். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள வடக்காடி வீதியில் திருக்கல்யாண மேடைக்கு புறப்பாடாகினர்.

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடையில் மங்கல வாத்தியங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஒலிக்க, 8.51 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேஸ்வரர் திருமங்கல நாண் அணிவிக்க, திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் திருக்கல்யாண நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற திருமணமான பெண்கள் புதிய மாங்கல்யக் கயிறு அணிந்து கொண்டனர். நேற்று இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், யானை வாகனத்தில் சுவாமியும் மாசி வீதிகளில் எழுந்தருளினர்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் 11ஆம் நாளான இன்று காலை 6.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.
பக்தர்கள், "ஹர ஹர சிவா" என முழக்கம் இட்டபடி உற்சாகமாக தேரை இழுத்து வருகின்றனர். கடுமையான கூட்டத்தையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார் கள்ளழகர்.












Click it and Unblock the Notifications