கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
கீமோ போர்ட் கருவி புற்று நோயாளிகளுக்கு நோயாளிகளின் சிரமங்களை போக்கும் ஒரு வரப்பிரசாத சிகிச்சை. நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை அளிக்கும் வரப்பிரசாதமாகும்.
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில் நோயாளிகளுக்கு கீமோதெரபி மருந்தை கீமோ போர்ட் கருவி என்ற கருவியை உடலில் பொருத்தி வழங்கும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன கீமோதெரபி சிகிச்சை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வலியற்ற சிகிச்சையாக ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
உலகம் முழுவதிலும் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்கள் பல இருந்தாலும் புற்று நோய் என்பது பலரும் அச்சப்படும் நோயாகவே உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் புற்றுநோயால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழக்கின்றனர்.
உலக மக்களில் மரணத்திற்கு காரணமான பட்டியலில், இரண்டாவது காரணமாக புற்றுநோய் தான் இருக்கிறது.
வறுமை கோட்டுக்கு கீழ் மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் பத்து இறப்பில் ஏழு நபர்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது, ஆபத்தான புற்றுநோய் வகைகள், புற்றுநோய் அறிகுறிகள், சிகிச்சைகள், ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உலக புற்று நோய் தினம் 2022 முதல் 2024 வரையில் ஒரே கருப்பொருளாக, 'close the care gap' என்ற தீமின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் புற்றுநோய்க்கான சோதனைகள் செய்ய வசதி, சிகிச்சை, உள்ளிட்டவை கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய, இடைவெளியை தவிர்ப்பதற்காக இந்த கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எந்த மாதிரியான வலிகள், வேதனைகளை அனுபவிக்கிறார் என்று அவர்களை கேட்டால் மட்டுமே தெரியும். வலியின்றி சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக வரப்பிரசாதமாக தமிழக தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சைத்துறையில் தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான புற்றுநோயாளிகள் சிகிச்சைப்பெற்று செல்கிறார்கள். தற்போது இந்த நோயாளிகளுக்கு கீமோதெரபி மருந்தை கீமோ போர்ட் என்று சொல்லக்கூடிய உடலுக்குள்ளேயே பொருத்தக்கூடிய நவீன கருவிகளை கொண்டு சிகிச்சை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் முதலாக 5 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிகிச்சை குறித்த அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு, புற்றுநோய் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். கீமோ போர்ட் என்ற இந்த நவீன கருவியை மூன்று ஆண்டுகள் வரை உடலிலே வைத்துக் கொள்ளலாம். கைகளில் உள்ள ரத்தநாளங்கள் மூலம் புற்று நோயாளிகளுக்கு கேன்சர் மருந்துகள் செலுத்தும்போது அது நோயாளிகளுக்கு மிகுந்த வலியை கொடுக்கும். மருந்துகள் ரத்த நாளங்களில் இருந்து கசிந்து வெளியே வந்தால் எரிச்சல் முதல் தசை சிதைவு, ஏன் சில சமயம் கைகளை இழக்கும் அபாயத்தை கூட ஏற்படுத்தும்.
புற்றுநோயாளிகளுக்கு இப்பொதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை கூட மருந்து செலுத்த வேண்டி உள்ளது. குறிப்பாக ரத்தப்புற்றுநோய், எலும்பு புற்றுநோய், மார்பக புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் போன்றவற்றை நீண்ட நாள் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடிகிறது. வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது. தொடர்ந்து பழைய முறையில் கைகளில் மருந்து செலுத்துவது கடிமான காரியமாகும். ஏனெனில், இரண்டு மூன்று மருந்துகளுக்கு பிறகு கைகளில் உள்ள ரத்த நாளங்கள் அடைத்துவிடும். ரத்தநாளங்கள் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக பணியாக இருக்கும். நோயாளிகளும் வலியால் துடிப்பார்கள்.
இந்த கீமோ போர்ட் கருவி இந்த அனைத்து சிரமங்களை போக்கும் ஒரு வரப்பிரசாத சிகிச்சை. நோயாளிக்கு அவர்கள் வேதனையை குறைப்பதுடன் மருத்துவமனைக்கு வந்தவுடன் மருந்து போட்டுவிட்டு எந்த வலியும் இன்றி எளிதாக செல்லலாம். மேலும், அதிக நோயாளிகளுக்கு எந்த பின் விளைவுகளும் இன்றி சிகிச்சை கொடுக்கலாம். குறிப்பாக நோயாளிகள் காலையில் வந்து மருந்தை செலுத்திக் கொண்டு புற நோயாளியாகவே வீடு சென்று விடலாம். எனவே இந்த கீமோ போர்ட் சிகிச்சை முறை அரசு ராஜாஜி மருத்துவமனையை நாடி வரும் ஏழை எளிய புற்று நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரைவான காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். புற்று நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு நிஜமாகவே இது ஒரு வரப்பிரசாதம்தான்.