போட்டி போட்டு கொடி கம்பம்..மக்களுக்கு தான் சிரமம்! அரசியல் கட்சிகளுக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்
மதுரை: அரசு நிலம், புறம்போக்கு நிலம், நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில் உள்ள அதிமுக வின் பழைய கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதே போல மதுரை, பைபாஸ்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நீதி ஆஜராகி தமிழகத்தில் கொடி கம்பம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து 114 வழக்குகள் பதிவாகியுள்ளன" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளந்திரையன்," பொது இடங்களில் கட்சி இயக்கம் மதம் சாதிய சம்பந்தமான கட்சி கொடிகளை வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோதல் ஏற்படுகிறது இது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறுகளும் விபத்தும் ஏற்படுகிறது இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரங்களிலும் கட்சி கொடி கம்பங்களை அமைத்து வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே இதனை கருத்தில் கொண்டு கொடிக்கம்பங்கள் நடுவதில் நீதிமன்றம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். மேலும் எதிர்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்க கூடாது.
பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பொதுக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிகள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி அனுமதி வழங்கலாம் அவ்வாறு வழங்கும் பட்சத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும் வைப்புத்தொகை மற்றும் வாடகை தொகையும் வசூல் செய்திருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் இந்த உத்தரவு தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதித்துறை உடனடியாக அனுப்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு அனுமதி கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications