போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்.. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!
மதுரை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியான நிலையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், கட்சிகளின் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டப் பேரவையில் கடந்த 28 ஆம் தேதி அன்று, நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மாணவர் சங்கத்தினரின் ஒருங்கிணைப்பில் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலை கல்லூரியில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வளாகத்தில் அமர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரியும் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் SFI தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, திருவாரூர் மன்னார்குடி, புதுக்கோட்டையிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications