மதுரை டூ மாலத்தீவு பறக்கிறது மாட்டுச் சாணம்.. டன்னுக்கு ரூ.7000.. செம டிமாண்ட்!
மதுரை: மாலத்தீவுக்கு மாட்டுச் சாணத்துக்கு அதிக தேவை இருப்பதால் மதுரையில் இருந்து அந்நாட்டுக்கு மாட்டுச்சாணம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒருகாலத்தில் விவசாயத்தை புறந்தள்ளிய அல்லது செயற்கை விவசாயம் மீது நாட்டம் கொண்டிருந்த பல நாடுகள் தற்போது இயற்கை விவசாயத்துக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. உலக அளவில் அரிசி, கோதுமை போன்ற உணவுப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, செயற்கை விவசாயத்தால் அதிகரிக்கும் நோய்கள் போன்ற காரணங்களால் இயற்கை விவசாயத்தில் அந்நாடுகள் இறங்கியுள்ளன.
இயற்கை விவசாயத்துக்கு பிரதானமே மாட்டுச் சாணம் தான். சிறந்த இயற்கை உரமாகவும், தேர்ந்த பூச்சிக்கொல்லியாகவும் இருப்பதால் மாட்டுச் சாணத்துக்கு தற்போது பல மடங்கு தேவை அதிகரித்துள்ளது.

பல நாடுகளில் தேவை
குறிப்பாக, அமெரிக்கா, குவைத், மலேசியா, மாலத்தீவு, சிங்கப்பூர், கத்தார் உள்ளிட்ட பல நாடுகளில் மாட்டுச் சாணத்துக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த நாடுகளின் இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து மாட்டுச் சாணம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

மதுரையில் இருந்து
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து மாலத்தீவுக்கு டன் கணக்கில் மாட்டுச் சாணத்தை அனுப்பும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மதுரையில் இருந்து இந்த முன்னெடுப்பு தொடங்கியுள்ளது. தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் மதுரையில் இருந்து மாலத்தீவுக்கு மாதந்தோறும் 50 டன் மாட்டுச் சாணத்தை அனுப்புவதற்கான தொடக்க விழா நபார்டு வங்கியின் மதுரை வேளாண் தொழில்முனைவோர் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது.

எவ்வளவு சாணம்
இதுகுறித்து நபார்டு நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் 90 ஆயிரம் கிடை மாடுகளை வளர்க்கும் 750 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த மாடுகள் யானைமலையில் இருந்து 100 கி.மீ. சுற்றளவிற்குள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. தினமும் சராசரியாக 90 முதல் 120 டன் சாணம் கிடைக்கிறது.

மாலத்தீவில் விலை அதிகமாம்
கேரளாவில் ஒரு டன் சாணம் ரூ.3,500-க்கு விற்கப்படுகிறது. அதே சமயத்தில், மாலத்தீவில் ஒரு டன் மாட்டுச்சாணம் ரூ.7000-க்கு விற்கப்படுகிறது. அந்த வகையில், முதன்முதலாக மதுரையில் இருந்து மாலத்தீவுக்கு 50 டன் மாட்டுச்சாணம் அனுப்பப்பட்டது. இனி மாதந்தோறும் 50 டன் மாட்டுச்சாணம் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications