மனைவி நடத்தையில் சந்தேகம்... மகளை கொன்று பரணில் வைத்த கொடூரத் தந்தை - மதுரையில் ஷாக்!
மதுரை: மதுரை அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகத்தில், தனது 9 வயது மகளை கொன்று, வாளியில் போட்டு வீட்டு பரணில் வைத்து விட்டு சென்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்,
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து. இவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதிக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் இருந்துள்ளார்.
காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெயிலராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.
அப்போ ஈரோடு.. இப்போ மதுரை.. இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. சீரழியும் சிறுமிகள் வாழ்க்கை.. பெற்றோரே உஷார்
வீட்டில் துர்நாற்றம்
இந்நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில், எட்டு வயது சிறுமி தன்ஷிகாவின் உடல் கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மகளை கொன்ற தந்தை
இதனையடுத்து, சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மனைவி மீது சந்தேகம்
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில வருடமாக காளிமுத்துவுக்கு, தனது மனைவி பிரியதர்ஷினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சண்டையில், மகளை கொன்றுவிட்டு, காளிமுத்து தலைமறைவானதும் தெரியவந்தது. இதனையடுத்து, காளிமுத்தை போலீசார் தேடி வந்தனர்.
கைது - வாக்குமூலம்
இந்நிலையில் தலைமறைவாக இருந்த காளிமுத்தை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவி பிரியதர்ஷினியுடன் ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக, தனது மகளிடம் காளிமுத்து புலம்பியுள்ளதாக தெரிகிறது. அதற்கு சிறுமியோ, நாம் இருவரும் இறந்து விடுவோம் என்று தந்தையிடம் கூறியுள்ளார்.
தற்கொலை பயம்
இதனை அடுத்து மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து, வீட்டின் பரண் மேல் சடலத்தை வைத்துவிட்டு, பின்னர் வீட்டை விட்டு காளிமுத்து வெளியேறிள்ளார். பின்னர் ரயிலில் விழுந்து சாகலாம் என்று முடிவெடுத்தாக காளிமுத்து கூறியுள்ளார். ஆனால், தற்கொலை செய்து கொள்ள பயம் ஏற்பட்டதன் காரணமாக மதுரையில் சுற்றி திரிந்தாகவும் காளிமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காளிமுத்துவை கைது செய்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகத்தில், 9 வயது மகளை கொலை செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.