டிட்வா புயல்.. தொடர் மழையால் ஊட்டி, கொடைக்கானல் போல் மாறிய மதுரை.. குளிரில் நடுங்கும் தென் மாவட்டம்!
மதுரை: டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், கடந்த 2 நாட்களாகவே ஊட்டி, கொடைக்கானல் போல் கடுமையான குளிர் அதிகரித்து, மக்கள் நடுங்கும் நிலை உருவாகி இருக்கிறது. மதுரையில் 22 டிகிரி வெப்ப நிலையும், தூத்துக்குடியில் 20.5 டிகிரி வெப்ப நிலையும் பதிவாகி இருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயல் சென்னைக்கு 250 கிமீ தூரத்திற்கு தெற்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இந்த டிட்வா புயல் முதலில் 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த சூழலில், தற்போது 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காலை 10 மணி வரை தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களிலும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் சாமானிய மக்கள் பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே தென் மாவட்டங்களில் நேற்று முதலே நடுங்க வைக்கும் வகையில் கடுமையாக குளிர் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போல் பகல் நேரத்திலேயே வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் தென் மாவட்ட மக்கள் குளிருக்கு பயந்து வெளியில் வர முடியாத நிலை உருவாகியது.
திருநெல்வேலியில் மட்டும் நேற்று 22 டிகிரி வெப்ப நிலை பதிவாகியது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் கூட இவ்வளவு தூரம் குளிர்ச்சியான சூழல் இதுவரை பதிவாகியது இல்லை. மார்கழி மாதங்களில் கூட தென் மாவட்டங்களில் 27 முதல் 30 டிகிரி வரையில் வெப்பம் பதிவாகும். ஆனால் 2 நாட்கள் பெய்த கனமழையால் தென் மாவட்டங்கள் முழுக்கவே ஊட்டி, கொடைக்கானல் போல் மாறிவிட்டது.
மதுரையில் நேற்று 22.6 டிகிரி வெப்பம் பதிவாகியது. கடைசியாக 2011ஆம் ஆண்டு மதுரையில் 24 டிகிரி வெப்பம் பதிவாகியது. தற்போது அந்த சாதனை முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் தூத்துக்குடியில் 2004ஆம் ஆண்டு 25.5 டிகிரி வெப்பம் பதிவாகியதே சாதனையாக இருந்தது. ஆனால் நேற்று 20.5 டிகிரியாக வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.
அதேபோல் கோவில்பட்டியில் 21.8 டிகிரி வெப்பமும், தென்காசியில் 21 டிகிரி வெப்பமும், திருச்செந்தூரில் 20 டிகிரியும், பாம்பனில் 23 டிகிரியும், கன்னியாகுமரியில் 26.6 டிகிரி வெப்பமும் பதிவாகி இருக்கிறது. இதனால் தென் மாவட்டங்களில் பலரும் ஜர்கின் அணிந்து வெளியில் சுற்றும் சூழல் உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications