தீபாவளி கங்கா ஸ்நானம்: நல்லெண்ணெய்யில் மகாலட்சுமி..வெந்நீரில் கங்கை..பாரம்பரியம் சொல்லும் ரகசியம்
மதுரை: தீபாவளி நாளில் நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். சூரிய உதயத்திற்கு முன்பாகவே நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும், பலகாரமும் முதலிடம் பிடிக்கும். கிராமப்புறங்களில் அசைவ உணவு களைகட்டும் இவை அனைத்துக்கும் முன்பாக உடம்பில் குளிர குளிர நல்ல எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது அவசியம். இதற்கு கங்கா ஸ்நானம் என்று சொல்வார்கள்.
சனி நீராடு என்பது பெரியவர்கள் கூறும் முது மொழி. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியம். அதே போல தீபாவளி பண்டிகை நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமையன்று தீபாவளி பண்டிகை நாளில் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சூரிய உதயத்திற்கு முன்பு அருணோதய காலத்தில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

கங்கா ஸ்நானம்
சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணெய் குளியல் செய்யக்கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால் தீபாவளி அன்று மட்டும் சூரிய உதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் குளியல் செய்து தன் பிள்ளையான நரகாசுரனை நினைக்க வேண்டும் என்று பகவான் கிருஷ்ணரிடம் வேண்டினாள் பூமாதேவி. கூடவே நல்லெண்ணெயில் மகாலட்சுமி, தண்ணீரில் கங்காதேவியும் எழுந்தருள வேண்டும் என்று பூமா தேவி கேட்க, அவ்வாறே ஆகட்டும் என்று அருள்புரிந்தார் பகவான். எனவேதான் தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்கின்றனர்.

பதமாக காய்ச்சிய நல்லெண்ணெய்
தீபாவளி நாளில் தலையில், உடம்பில் தேய்க்கும் நல்லெண்ணெயை காய்ச்சுவதே ஒரு கலை அதற்கு தேவையான பொருட்களை முதல்நாளே சேகரித்து வைத்து விடுவார்கள். நல்லெண்ணெய் காய்ச்சுவதற்காக ஒரு வாணலியை தயார் செய்து வைத்து விடுவார்கள். அதிகாலையிலேயே எழுந்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே அரிசி, சிறிதளவு காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைப்பார்கள்.

நல்லெண்ணெய் தேய்ப்பது எப்படி
பண்டிகை நாளில் யாருக்குமே தூக்கம் வராது. அதிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொள்வார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரிசையாக அமர்ந்து ஒரு கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி உடம்பில் தேய்த்து ஊறவைப்பார்கள். வெது வெதுப்பான நல்லெண்ணெயை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்து விட்டு உள்ளங்கால்களில் கடைசியாக தேய்க்க வேண்டும். அரைமணிநேரம் ஊற வைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

வெந்நீரில் எழுந்தருளும் கங்கை
வெந்நீரை காய்ச்சி அதில் சிறிதளவு சந்தனம், மஞ்சள் போட்டு குளிப்பது பாரம்பரியம். வெந்நீரில் சந்தனம், மஞ்சள் தூள் போடுவதால் அந்த நீரில் கங்கை எழுந்தருளுவதாக ஐதீகம். தேய்த்து குளிப்பதற்கு கலப்படம் எதுவும் இல்லாத அரப்பு, சீயக்காய்தான் பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம்
தீபாவளி நாளன்று சூரிய உதயத்துக்கு முன்பு உள்ள அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும். இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது.

தலைதீபாவளி
தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் தீபாவளி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது. குளிக்கும்போது அபாமார்கம் என்னும் நாயுருவிச் செடியை மூன்று முறை தலையைச் சுற்றி வீசி எறிந்து விட வேண்டும். குளித்த பின்னர் சாமி கும்பிட்டு புத்தாடை அணிந்து வீட்டு பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வது நல்லது.

மகாலட்சுமி அருள் கிடைக்கும்
தீபாவளி மட்டுமல்லது பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் ஓய்வு எடுப்பது அவசியம். குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் குளியலின் ஐதீகம் அழகு, ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மூன்றுடனும் தொடர்பு உள்ளது. மகாலட்சுமியின் அருள் கிடைக்கவும், கங்கா தேவியின் ஆசி கிடைக்கும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவோம் நலத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோம்.












Click it and Unblock the Notifications