சட்டவிரோத மணல் கொள்ளை! உயர்நீதிமன்றத்தில் ஆஜரான திண்டுக்கல் ஆட்சியர்! நீதிபதிகள் போட்ட ஆர்டர்!
மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, கனிம வளம் நாட்டின் சொத்து
வளங்கள் கொள்ளை போவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை எனவும், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படாமல் தடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விதிமீறலில் ஈடுபட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் கூறிய நிலையில், சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதியில் முருகன், முனியப்பன், மாயி, இளங்கோ உள்ளிட்ட 9 நபர்கள் சட்டவிரோதமாக கனிமவள குவாரிகளை நடத்தி வருகின்றனர். அது தொடர்பாக திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோத மணல் குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும்.
இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், அவர்களுக்கு அதிக அபராதம் விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, "குவாரிக்கு சீல் வைக்கப்பட்ட பின்னரும் சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "விதிமீறலில் ஈடுபட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கிருந்த இயந்திரங்களையே சரிபார்த்து உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.
அதோடு சீல் வைக்கப்பட்ட பின்னர் குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி அது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இனிமேல் திண்டுக்கல் மாவட்டத்தில்" கனிம வளம் நாட்டின் சொத்து வளங்கள் கொள்ளை போவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் சட்டவிரோத குவாரி விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications