மதுரையில் திமுக பொதுக்குழு.. 3 நாட்களுக்கு ஹோட்டல்களையும் விட்டு வைக்காத அமைச்சர் மூர்த்தி!
மதுரை: 48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி பிரம்மாண்டமாக மேற்கொண்டு வருகிறார். முதல்நாள் இரவே முதல்வர் மு.க.ஸ்டாலினின் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த நாளில் தடபுடலாக விருந்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நிர்வாகிகள் தங்குவதற்காக மதுரையில் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களையும் புக் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்காக அரசியல் கட்சியினர் இப்போது இருந்தே தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக தரப்பில் மதுரை மாவட்டம் உத்தங்குடியில் ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

10 ஆயிரம் திமுகவினர்
அதேபோல் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி-க்கள், முக்கிய பிரமுகர்கள் என்று 10 ஆயிரம் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக பொதுக்குழு பிரம்மாண்டமாக நடத்த அமைச்சர் மூர்த்தி கைகளில் திமுக தலைமை பொறுப்பை வழங்கி இருக்கிறது. இதற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
80% பணிகள் நிறைவு
அதேபோல் மேடையில் மட்டும் 100 பேர் அமரும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக 100 அடி கம்பத்தில் கொடியை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுக்குழு கூட்டப் பணிகளை சுமார் 80 சதவிகிதம் வரை முடித்துவிட்டார் அமைச்சர் மூர்த்தி. அதேபோல் பொதுக்குழு கூட்டத்திற்கு முதல் நாள் இரவே நிர்வாகிகள் பலரும் வரத் தொடங்கிவிடுவார்கள்.
ரோடு ஷோ நடத்தும் மு.க.ஸ்டாலின்
அதுமட்டுமல்லாமல் மே 31ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கியது முதலே நகர்ப் பகுதிகள் வழியாக சுமார் 20 கிமீ ரோடு ஷோ நடத்த அமைச்சர் மூர்த்தி திட்டமிட்டிருக்கிறார். 48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளதால், இதனை யாரும் மறக்க கூடாத வகையில் ஏற்பாடுகளில் அமைச்சர் மூர்த்தி மும்முரமாக இருக்கிறார்.
3 நாட்களுக்கு ஹோட்டல் புக்கிங்
இதனால் முந்தைய நாள் இரவு முதலே நிர்வாகிகளை கவனிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள் அனைத்தையும் சுமார் 3 நாட்களுக்கு அமைச்சர் மூர்த்தி புக் செய்துவிட்டதாக தெரிகிறது. முக்கிய நிர்வாகிகள் தங்குவதற்கும், அவர்களை கவனிக்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
தயாராகும் விருந்து
அதேபோல் பொதுக்குழு முடிவடைந்த பின் திமுகவினர் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவ விருந்து வைக்கப்பட உள்ளது. அந்த விருந்தில் ஈரல், தலைக்கறி, மூளை, மீன், நண்டு, இறால், ஜிகர்தண்டா என்று தடபுடலான விருந்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பொதுக்குழு மூலமாக திமுக தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications