"தத்தளிக்கும் சென்னை" அமைச்சர்கள் ஓடுகிறார்களே தவிர பணிகள் நடப்பதில்லை.. ஆர்பி உதயகுமார் அட்டாக்!
மதுரை: மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடிக்க அரசு தவறிவிட்டதால், தற்போது சென்னை தத்தளித்துவருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்தாண்டு இயல்பை விட 38 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை கேகே நகர், அசோக் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இப்டி கேப்பே விடாம கொட்டிட்டு இருந்தா என்ன சார் அர்த்தம்.. மனசாட்சியே இல்லையா?
சென்னை தத்தளிக்கிறது
இந்த மழையால் சென்னை வியாசர்பாடி சேர்ந்த தேவேந்திரன் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக பலியாகி உள்ளார். புளியந்தோப்பில் ஒரு பெண் மழையினால் சுவர் இடிந்து விழுந்து கதறி அழும்காட்சி கண்ணீரை வர வழைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறதா? ஒரு மழைக்கே தமிழகம் தத்தளிக்கிறது என்கிற நிலையை நாம் பார்க்கிறோம். சென்னை வடிநீர் கால்வாய் திட்டம் அரை குறையாக செய்துள்ளார்கள்.
உண்மை நிலை இதுதான்
முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு 70 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன என்று கூறுகிறார் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணி முடிந்து இருக்கிறது என்ற கள நிலவரம் சரியாக தெரியவில்லை. அதிகாரிகள் 90 சதவிகித பணிகள் முடிந்து விட்டதாக ரெடிமேட் பதில்களை கூறுகிறார்களே தவிர உண்மையான களநிலவரத்தை அதிகாரிகள் சொல்வதே இல்லை. சென்னையில் வடிகால் பணிகள் 40 சதவிகித பணிகள் கூட முடியவில்லை என்பது தான் இன்றைய உண்மையான நிலை.
அமைச்சர்கள் ஓடுகிறார்கள்
இன்று ஒரு சிறிய மழைக்கு சென்னை தத்தளிக்கிறது. அங்குமிங்கும் அமைச்சர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த வேலையும் நடைபெறுவதாக தெரியவில்லை. இந்த பிரதான கால்வாய் தொடர் கண்காணிப்பு, இணைப்பு மற்றும் கண்காணிக்க வேண்டிய கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் இவைகள் எல்லாம் முழுமையாக கண்காணிக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டாக இருக்கிறது. தற்போது சிங்கார சென்னை திட்டத்தில் கட்டமைப்பு நிதி, வெள்ளத் தடுப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியின் புதிய மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதாக அரசு அறிவித்திருக்கிறது.
மக்கள் அவதி
இந்த ஆண்டு 1058 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் மேற்கொள்வதாக அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு பணிகள் செய்திருந்தால், சென்னை அல்லல்பட வேண்டிய அவசியம் இருக்காது என்பது தான் பெரும்பான்மையான மக்களினுடைய கருத்து. அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி என ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கக் கூடிய மழை நீர் தான் நமக்கு முக்கியம். மழை கொஞ்ச நேரம் பெய்தால் கூட ,சென்னையில் மழை நீர் சாலையை மூழ்கடித்து செல்கிறது. மக்கள் அவதிப்படக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.
அரசு தவறிவிட்டது
சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு சாலையில் ஒரு மண்ணை கொட்டி பணி செய்துள்ளார்கள். திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிட்டியின் பரிந்துரை முடிவுகள் என்ன என்பதை இதுவரை அரசு வெளியிடவில்லை.கடந்த ஆண்டு சென்னையில் பெய்த பருவமழையின் போது அரசு சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பருவமழையின் போது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறி விட்டது என்று விமர்சித்துள்ளார்.