ஐயயோ.. ஆர்எஸ்எஸ் கொள்கைகளா.. ஏங்க.. செய்தியாளர் சந்திப்பில் பதறிய செல்லூர் ராஜூ!
மதுரை: வருமான வரித்துறை மீதான பயம் காரணமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக வரவேற்பளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பில் இருந்து வரும் நிலையில், நிர்வாகிகள் அதிமுகவை பலப்படுத்தும் வகையில் செயல்பட தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரையில் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றார்.
திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு.. மதுரையில் மாபெரும் போராட்டம்.. செல்லூர் ராஜு பேட்டி!
செல்லூர் ராஜூ
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறுகையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின், அதிமுக மீண்டும் வலுவடைந்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக திமுக, அமமுக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது திமுக வழுவிழந்து வருவதை கூறுகிறது. வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அதிமுகவில் இணைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ்
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைவதற்கான காரணம் என்ன என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுகவில் இணைந்தால் கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம் என்று நம்பிக்கையுடன் இணைந்துள்ளனர் என்று பதிலளித்தார்.
பதற்றம்
பின்னர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அதிமுக பின்பற்றுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதறிய செல்லூர் ராஜூ, ஐயயோ ஆர்எஸ்எஸ் கொள்கைகளா.. நீங்க வேற.. அதிமுக பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி அதிமுக தொடர்ந்து முன்னேறும் என்று தெரிவித்தார்.
திமுக மீது விமர்சனம்
தொடர்ந்து, திமுக - பாஜக நெருக்கம் குறித்த கேள்விக்கு, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றதற்கு பயமே காரணம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை வந்துவிடுமோ என்று பயத்தால் வரவேற்றுள்ளார்கள். இத்தனை நாட்களாக ஒன்றிய பிரதமர் என்று கூறி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இப்போது இந்தியப் பிரதமர் என்று அழைக்க தொடங்கியுள்ளார். இந்த மாற்றத்திற்கு பயம் மட்டுமே காரணம் என்று விமர்சித்தார்.