எவ்வளவு ஏமாற்று வேலை.. நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகதான்.. இப்போ அப்படியே.. எடப்பாடி காட்டம்
மதுரை: நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும், உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உண்ணா விரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்றும் மதுரை எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் பிரமாண்ட கூட்டம் இது என்பதால் தமிழக அரசியலிலும் இந்த மாநில மாநாடு முக்கியத்துவம் பெற்றது. மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் இந்த மாநாடு நடைபெற்றது. சுமார் 63 ஏக்கரில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல் அமைத்து இந்த மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் பங்கேற்க நேற்று முதலே அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயிலிலும் அதிமுகவினர் புறப்பட்டு சென்றனர். அதேபோல், வேன், கார்கள் என நேற்று மாலை முதலே அணிவகுத்து சென்றனர். இன்று காலை முதல் மாநாடு தொடங்கியது. அதிமுக மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் இருப்பதற்கான நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.
லட்சகணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்த நிலையில், காலை முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரோபோ சங்கர், மதுரை முத்து, ராஜலட்சுமி - செந்தில் உள்ளிடோர் பங்கேற்றனர். அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பேச துவங்கினார்.
அப்போது, அம்மா மினி கிளினிக், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், குடிமராமத்து திட்டம், ஏரிகளை தூர்வாரியது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது என அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி பேச தொடங்கினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சிக்க தொடங்கினார். அவர் பேசியதாவது:- நீட் தேர்வு விவகாரத்தில் திமுக பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது.
இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உண்ணா விரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். சிந்தித்து பாருங்கள்... 2010 டிசம்பர் 21 ல் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டிபிகேஷன் வெளியிட்டது. 2010 ல் காங்கிரஸ் ஆட்சி. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். திமுக எம்.பி காந்தி செல்வன் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார்.
அந்த காலத்தில் தான் நீட் தேர்வு வந்தது. இதை மறைக்க முடியாது. இதை மறைத்து இன்றைக்கு உண்ணா விரதம் இருக்கிறார். எவ்வளவு ஏமாற்று வேலை... எண்ணிப்பாருங்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது 2010 ல் காங்கிரஸ் ஆட்சி. திமுக அங்கம் வகித்த அரசு. கொண்டுவந்தது காங்கிரஸ் - திமுக. இன்றைக்கு அந்த நீட் தேர்வை ரத்து செய்ய உண்ணா விரத போராட்டம் என நாடகம்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக ஆட்சி வந்ததும் முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களா இல்லையா.. மானம், வெட்கம், ரோஷம், சூடு இருந்தால் பதில் சொல்லுங்க... மாணவர்களை ஏமாற்றாதீர்கள்..
நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக.. அதை தடுத்து நிறுத்த போராடியது அதிமுக.. இதை மறைத்து இன்றைக்கு மிகப்பெரும் அதிருப்தி திமுக அரசு மீது மக்களுக்கு வந்துள்ளதால் ஏதோதோ நாடகம் ஆடுகிறார்கள். இவர்களே கொண்டு வந்து.. பின்னர் இவர்களே ரத்து செய்வதற்கு நாடகம் ஆடுகிற ஒரே கட்சி திமுகதான். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications