ஆமா! வருஷா வருஷம் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குறாரே! அது ஏன் தெரியுமா?
மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? இதன் பின்னால் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கதை தெரியுமா?
தூங்கா நகரம், கோயில் நகரம், திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இதன் எதிரொலியாக மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடத்தப்படுகிறது.

இந்த விழாவை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகிறார்கள். சித்ரா பவுர்ணமி அன்று வானில் தகதக என நிலவு ஜொலிக்க மதுரையே ஜெகஜோதியாய் மின்னும்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு பின்னால் இருக்கும் கதையை தெரிந்துக் கொள்ளுங்கள். அழகர் மலையில் இருந்து மதுரை வந்து ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்துவிட்டு மீண்டும் அழகர் மலைக்குத் திரும்பும் வரை மதுரை மக்களின் பேச்சும் நினைப்பும் அழகரை பற்றியதாக இருக்கும்.
தங்கை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் என்ற செய்தியை கேள்விப்பட்டு அழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த திருமண வைபவத்தை காண அழகர்மலையில் இருந்து இறங்கி மதுரைக்கு வருகிறார். வரும் வழியில் எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இதனால் தங்கையின் திருமணத்தை காண முடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார் என்பதுதான் புராண கதை ஆகும். அது ஒரு புறம் இருக்க, சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' என சாபமிட்டார்.
உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, "விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக் கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்" என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன. இப்படி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் குறித்து புராணக் கதைகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications