மொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு
Recommended Video
மதுரை: புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குறிப்பிட்ட மொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்கும் போக்கை மத்திய அரசு கையாள்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் புதிய கல்விகொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி கருத்தரங்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், மார்க்சிஸ்ட் .சு.வெங்கடேசன் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது: ஒரு குறிப்பிட்ட மதம், மொழி, கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிப்பதற்காக மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனையே தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை நமக்கு உணர்த்துகிறது என்றார்.

தேசிய கல்வி கொள்கை வரைவு
தொடர்ந்து பேசிய அவர், மக்களின் கருத்துக்களை அறியாமல் தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை இறுதி செய்யக் கூடாது. இதற்கான கால அளவை மேலும் நீட்டிக்க வேண்டும். நாங்கள் வலியுறுத்தியதன் விளைவாக ஒரு மாதத்திற்கு கால அளவை நீட்டித்திருக்கிறார்கள். மேலும் ஆறு மாதத்திற்கு இந்த கால அளவை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உதாரணம்
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்ததற்குக் காரணம் நம்முடைய ஒருங்கிணைந்த ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மொழிசார்ந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொடர்ந்து நாம் ஒற்றுமையாக போராடினால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

தமிழக அரசுக்கு பாராட்டு
தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்களை உருவாக்கிய தமிழக அரசுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.மேலும் இது போன்ற பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகப் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.

நுழைவுத் தேர்வு வேண்டாம்
நீட் தேர்வே வேண்டாம் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் போது மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை நடத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. நீட், நெக்ஸ்ட் தேர்வுகள் கூடாது என்ற கொள்கையை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் இரண்டு மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார் என்கிற உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழக அரசுக்கு கோரிக்கை
இதனை தமிழக அரசு இவ்வளவு நாள் மூடி மறைத்து இருந்தது என்பது கண்டிக்கத்தக்கது. முதல்வர் மீண்டும் இந்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதனோடு நீட் தேர்வு நெக்ஸ்ட் தேர்வு ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியும் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications