பாஜகவில் "வேலையைக் காட்டும்" டாக்டர் சரவணன்.. ‘"இது சரியா வராது.." அழுத்தம் கொடுக்கும் திமுக!
மதுரை: மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன், பா.ஜ.கவில் இணைந்த பிறகு, மதுரையில் அக்கட்சியை வலுப்படுத்தும் எண்ணத்தோடு மாற்றுக் கட்சியினரை இணைத்து வருகிறார்.
தி.மு.கவில் எம்.எல்.ஏவாக இருந்து, சீட் தரப்படாது எனத் தெரிந்து வெளியேறிய அவர் மீது தி.மு.கவினர் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் மாற்றுக்கட்சியினரை பா.ஜ.கவில் இணைத்து வருவதால் அவருக்கு செக் வைக்க தி.மு.கவினர் திட்டமிட்டுள்ளனர்.

டாக்டர் சரவணன்
மதுரையில் பிரபலமான சரவணா மருத்துவமனையின் தலைவரான டாக்டர் சரவணன், ம.தி.மு.கவில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக சில காலம் மதிமுக-வில் பணியாற்றினார். 2015-ல் பா.ஜ.கவில் சேர்ந்தார். பின்னர் 2016-ல் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.
2017-ல் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு அ.தி.மு.கவின் ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார். ஏ.கே.போஸ் காலமானதை தொடர்ர்ந்து மீண்டும் 2019ல் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, எம்.எல்.ஏ-வானார் டாக்டர் சரவணன்.

சொந்தப் பணத்தில் உதவிகள்
தி.மு.க எம்.எல்.ஏ ஆனபிறகு திருப்பரங்குன்றம் தொகுதியை அன்றைய அ.தி.மு.க அரசு புறக்கணித்த நிலையில், சொந்தப் பணத்தை செலவு செய்து நலத்திட்டங்களை செய்தார். இதனால் தொகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கும் அதிகரித்தது.
ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கட்சிக்குழப்பங்களால் இவருக்கு வேறு தொகுதியிலும் சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைந்தார்.

பா.ஜ.கவில் இணைந்தார்
இதையடுத்து "தி.மு.க எம்.எல்.ஏ-க்களிலேயே நான்தான் சொந்தப் பணத்தைச் செலவழித்து தொகுதி மக்களுக்கு சேவை செய்தேன். மணல் கடத்தலுக்கு எதிராக வழக்கு போட்டேன். இப்படி நல்ல விஷயங்களை செய்ததால்தான் எனக்கு சீட் கொடுக்கவில்லையோ" என தி.மு.கவை விமர்சித்தார்.
இதையடுத்து டாக்டர் சரவணனை கட்சிக்குள் இழுக்க அதிமுக திட்டம் போட்டது. ஆனால், அங்கும் ஏற்கனவே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் இவர் பா.ஜ.கவில் பேசி அக்கட்சியில் இணைந்தார்.

4 மணி நேரத்தில் சீட்
தி.மு.கவில் சீட் வழங்கப்படாத நிலையில், உடனடியாக பா.ஜ.கவில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு அக்கட்சியில் சேர்ந்த 3 மணிநேரத்தில் மதுரை வடக்கில் போட்டியிட சீட் ஒதுக்கியது பா.ஜ.க. ஒரே நாளில் தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்து பா.ஜ.க வேட்பாளரானார் டாக்டர் சரவணன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தார்.
சரவணனின் ஆட்டத்தை அடக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்டம் நமக்குத்தான் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மீது தி.மு.க மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஒரு கண் வைத்துள்ளனர்.

பாஜகவை வலுப்படுத்த
பா.ஜ.கவில் மதுரை நகரத் தலைவராக இருக்கும் சரவணன், தி.மு.க, அ.தி.மு.கவில் அதிருப்தியில் இருப்பவர்களையெல்லாம் பா.ஜ.கவுக்கு இழுக்க திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோரை பா.ஜ.கவில் சேர்த்துள்ளார். இதனால், பா.ஜ.க தமிழக தலைமையிடமும் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

மதுரையில் கூட்டம்
மதுரையில் பா.ஜ.கவை வலுப்படுத்தினால் தென்மாவட்டங்களில் கரைசேரலாம் எனத் திட்டமிடும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சரவணனுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். நேற்று பா.ஜ.கவின் புதிய நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பேனர் விவகாரம்
மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி சில பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அவர்களுடன் நகர் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில், அனுமதி இன்றி பேனர் வைத்ததாக டாக்டர் சரவணன் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யலாமா
இதையே சாக்காக வைத்து அவரை கைது செய்யவேண்டும் என்றும் மதுரை போலீசாருக்கு தி.மு.கவினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனராம். ஆனால், அவரை கைது செய்தால் விவகாரம் பெரிதாகும் என்றும், முதல்வரிடம் கேட்டுவிட்டுத்தான் செய்ய முடியும் என்றும், அமைச்சர்களை பேசச் செல்லுங்கள் என்றும் போலீசார் அவர்களிடம் கூறியுள்ளனர். இதுதான் இப்போது மதுரை மாநகர தி.மு.கவினரிடையே ஹாட் டாபிக்.












Click it and Unblock the Notifications