மதுரை மக்களவைத் தொகுதி! அதிமுகவில் எம்.பி. சீட்டுக்கு காய் நகர்த்தும் டாக்டர் சரவணன்!
மதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அக்கட்சியின் மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் காணும் பணிகள் அதிமுகவில் தீவிரம் அடைந்துள்ளன. ஏற்கனவே ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் வீதம் மாவட்டச் செயலாளர்களிடமிருந்து லிஸ்ட் கேட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிலிருந்து ஒருவரை டிக் அடிக்கவுள்ளார்.

அந்த வகையில் மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட டாக்டர் சரவணன் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இவரது ஆர்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஊக்கமளித்து வருவது அவருக்கான ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. தன்னை வேட்பாளராக களமிறக்கினால் அகமுடையார் சமுதாயக வாக்குகளை அள்ளுவதோடு தனது மருத்துவப் பணியால் கட்டமைத்து வைத்திருக்கும் வாக்கு வங்கியும் கை கொடுக்கும் என கணக்கு சொல்லியிருக்கிறார் டாக்டர் சரவணன்.
மதுரையில் டாக்டர் சரவணன் போட்டியிட விருப்பம் காட்டும் நிலையில், கடந்த முறை மதுரையில் போட்டியிட்ட ராஜ் சத்யன் இந்த முறை விருதுநகரில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இதற்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது தரப்பில் வேட்பாளராக தனக்கு நெருக்கமானவரை களம் இறக்க காய் நகர்த்துகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் சீட் விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமாரை பொறுத்தவரை தனது தீவிர ஆதரவாளரான சரவணனுக்கு பச்சைக்கொடி காட்டுவார் என்றே தெரிகிறது. திமுக தரப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் இந்த முறையும் தொகுதி ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் வெங்கடேசன் தான் மீண்டும் அங்கு களமிறங்குவார் என தகவல்கள் வருகின்றன.
தொகுதியில் நிலவும் பெயர், செல்வாக்கு, சமுதாய பலம், செலவுக்கு பணம் , உள்ளிட்ட விவகாரங்களை ஆராய்ந்து விரைவில் அதிமுக வேட்பாளர்களை சத்தமின்றி ஃபைனல் செய்யும் திட்டத்தில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
டாக்டர் சரவணனை பொறுத்தவரை அதிமுகவுக்கு புது வரவு தான் என்றாலும் கூட, அவரது ஆக்டிவ் பாலிடிக்ஸ் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications