ஸ்தம்பித்த மதுரை.. போக்குவரத்தில் மாற்றம் செய்தும் லைன் கட்டி நின்ற வாகனங்கள்! இந்த வழியா போகாதீங்க
மதுரை: அதிமுகவின் பொன்விழா மாநில மாநாடு தொடங்கியுள்ள நிலையில், மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் நடைபெறும் மாநில அளவிலான மாநாடு இது என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் கட்சி ஓபிஎஸ் தரப்பினரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது முழுக்க முழுக்க கட்சி எடப்பாடியின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் நிலையில் தென் மண்டலத்தில் தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்க செய்ய இந்த மாநாடு திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

மதுரை வளையங்குளத்தில் சுமார் 60 ஏக்கரில் இந்த மாநாட்டுக்கான திடல் அமைக்கப்பட்டுள்ளது. கார், பஸ் பாரக்கிங் செய்யவும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மாநாட்டுக்காக நகருக்குள் நுழையும் பேருந்துகள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, தென் மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வரும் வாகனங்கள் காரியாபட்டி, வலையங்குளம் வழியாகவும், திருமங்கலம், கப்பலூர் விமான நிலைய சுற்றுச்சாலை வழியாகவும் மாநாட்டு திடலை வந்தடைய வேண்டும்.
இதே வட மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல், வாடிப்பட்டி வழியாக வரும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டை, தோப்பூர், கப்பலூர், விமான நிலைய சுற்றுச்சாலை வழியாக மாநாட்டு திடலுக்கு வர வேண்டும். வட மாவட்டங்களில் இருந்து மேலூர், ஒத்தக்கடை வழியாக வரும் வாகனங்கள், விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும். காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள், நரிக்குடி மற்றும் திருமங்கலம் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.
வலையங்குளம் முதல் விரகனூர், கப்பலூர் வரையுள்ள சுற்றுச் சாலையை பொதுமக்களின் வாகனங்கள் எளிதாக பயன்படுத்த முடியாத சூழல் இருக்கும் என்பதால், அந்த வாகனங்கள் உரிய மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்துச் செல்ல வேண்டும் என்று மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் மாநாடு நடக்கும் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications