நீர்வரத்து சுத்தமாக நின்றது... 30 அடிக்கு சரிந்த வைகை அணையின் நீர்மட்டம்
Recommended Video

ஆண்டிப்பட்டி: வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும் என்று சொல்லும் அளவிற்கு இருந்த அணையின் நீர்மட்டம் 30 அடியாக சரிந்தது. இதனால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடி ஆகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ஓரளவு மழை பெய்து வந்தது. இதனால், அணையில் தொடர்ந்து 40 அடிக்கு மேல் தண்ணீர் இருந்து வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
விவசாய பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் சற்று குறைய தொடங்கியது. அத்துடன் பருவமழையும் கைகொடுக்காததால் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
அணைக்கு நீர்வரத்து இல்லையென்றாலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முல்லைப்பெரியாறு அணைக்கும் நீர்வரத்து இல்லாததால், வைகை அணைக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 30 அடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு இதே நாளில் 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நேற்று குடிநீருக்கு மட்டும் 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வைகையில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications