அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட்
மதுரை: சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் பெரும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக கூட்டணியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. மதிமுகவும் தவெகவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வருகிறது. இந்நிலையில் தவெகவை குழந்தையுடன் ஒப்பிட்டு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம், "2 வயது குழந்தையான தவெகவுடன் 32 வயதான மதிமுக இணைந்து பயணிக்குமா" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு துரை வைகோ, "மதிமுகவுக்கு 33 வயது. தவெகவை 2 வயது குழந்தை என்று சொல்கிறீர்கள். 2 வயது குழந்தைக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இருக்காது. நான் குழந்தையை சொல்கிறேன். தவெகவை சொல்லவில்லை. குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது.

குழந்தையை வளர்ப்பது
குழந்தையை நல்வழிப்படுத்தி வளமான எதிர்காலத்தை கொடுப்பது 33 வயதுடையவருக்கான பொறுப்பு. நீங்கள் கேட்டதற்காக நான் பொதுவாக சொல்கிறேன். தவெகவையோ, மதிமுகவையோ சொல்லவில்லை. தமிழ்நாடு அரசுக்கு 10 லட்சம் கோடி கடன் உள்ளது. மின்சாரத்துறை, போக்குவரத்துறை பிரச்சனைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன. இவற்றில் சீர் திருத்தம் செய்யவில்லை. மின்சாரத்துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மின் கம்பங்களை மாற்றவில்லை. அதை ஒரு மாதத்தில் சரி செய்ய முடியாது.
மின்சார உற்பத்தியில் என்ன பிரச்சனை இருக்கிறது, பகிர்வில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கு தீர்வு என்ன என்பதை புதிய அரசு சொல்ல வேண்டும். விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக சொல்லியுள்ளனர். தேர்தல் அறிக்கையில் சொல்லிய சிலவற்றை முடியாது என்று சொல்லியுள்ளனர். அதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும். சிலர் தவறான சித்தரிப்புகளை உருவாக்கி வருகிறார்கள்.
திமுக மீது வருத்தம்
ஒரு கட்சி ஒரு கூட்டணியில் உள்ளது. அவர்கள் ஏற்கனவே இருக்கும் கட்சியில் ராஜினாமா செய்து, மற்றொரு கட்சியில் இணைந்து பதவி பெறுவது துரதிர்ஷ்டவசமானது என்றேன். அதை ஏதோ இன்னொரு கட்சி கூட்டணியில் சேர்ந்து அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று சொன்னதாக பரப்புகிறார்கள். சமூக நீதி, சமத்துவம் பற்றி பேசுகிறோம். ஒரு கட்சியை உங்கள் சின்னத்தில் போட்டியிட கூடாது. எங்கள் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று சொல்வது தவறு என ஆதங்கப்பட்டேன்.
எனக்கு நெருக்கடி கொடுக்கும்போது, செத்தாலும் என் சின்னத்தில் தான் சாவேன் என்று திமுகவின் 4 அமைச்சர்கள், 4,000 நிர்வாகிகளின் முன்னிலையில் சொன்னேன். கூட்டணிக்காக உங்களுக்கு வேலை செய்வேன். ஆனால் உங்கள் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் என ஒரு முடிவு எடுத்தோம். 10 வருடங்களாக இந்த கூட்டணியில் உள்ளோம். சின்னத்துக்காக வெளியேறினால் ஆசைப்பட்டு வெளியேறுவதாக தான் பரப்புவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications