13 மணிநேரம்.. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு.. சிக்கிய ஆவணங்கள்
மதுரை: ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் 13 மணிநேரம் நடந்த இந்த சோதனை இன்று காலை 7 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர அங்கித் திவாரி. இந்நிலையில் தான் திண்டுக்கல் அரசு மருத்துவராக இருப்பவர் சுரேஷ் பாபு. இவர் மீதான அமலாக்கத்துறை வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாக அங்கித் திவாரி கூறியுள்ளார்.

இதையடுத்து சுரேஷ் பாபுவை விசாரணைக்கு அழைத்துள்ளார். அதன்பிறகு அவரிடம் பணம் கேட்டுள்ளார். ரூ.3 கோடி கொடுத்தால் வழக்கு விசாரணையை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு சுரேஷ் பாபு மறுத்துள்ளார்.
இதைடுயடுத்து லஞ்சப்பணம் ரூ.51 லட்சமாக குறைத்து கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபு, அங்கித் திவாரியிடம் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பணத்தை கேட்டு அங்கித் திவாரி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.
இதுபற்றி டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிவுரையில் சுரேஷ் பாபு நேற்று ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் வழங்கினார். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை குறிவைத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். முதலில் இந்த சோதனைக்கு அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பு தராமல் மத்திய படையை வரவழைத்தனர். இதனால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இருப்பினும் அப்படி எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையை தொடங்கினர். இந்த சோதனை நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. அதன்பிறகு விடியவிடிய நடந்தது. 12 மணிநேரம் கடந்தும் இந்த சோதனை நடந்து வந்தது. இறுதியாக இன்று காலை 7 மணியுடன் சோதனை முடிவடைந்தது. மொத்தம் 13 மணிநேரம் சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையின்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கித் திவாரி தான் வாங்கிய பணத்தை பிற அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என சுரேஷ் பாபுவிடம் கூறியுள்ளாராம். இதனால் அப்படி பிற அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? இல்லாவிட்டால் அங்கித் திவாரி மட்டுமே லஞ்சப்பணத்தை வைத்து கொண்டாரா? என்பது பற்றி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications