மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த எடப்பாடி, கனிமொழி.. வளையல் கடையில் கனிமொழி.. ஒரே பரபரப்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒரே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திமுக எம்பி கனிமொழியும் வருகை தந்ததால் பரபரப்பு எழுந்தது.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக உள்ளார் திமுக எம்பி கனிமொழி. அவர் தலைமையில் எம்பிக்களான ஏகேபி சின்ராஜ், ராஜ்வீர்டிலர், நரேந்திர குமார், தாளரிரெங்கையா, அப்துல்லா, கீதா பென்வா ஜெசிங் பாய்ரத்வா, ஷியாம் சிங் யாதவ் உள்ளிட்ட 11 எம்பிக்கள் குழு மதுரை வந்தனர்.

இவர்கள் விளாச்சேரி, கீழடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது குறித்து சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
எம்பிக்கள் காலை உணவு திட்டத்தில் அந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறினர். அப்போது அந்த உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என எம்பி ஷியாம் சிங் யாதவ் (பகுஜன் சமாஜ் கட்சி) விரும்பினார். அதன் பேரில் அவருக்கும் மற்ற எம்பிக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
இந்த திட்டம் நன்றாக இருப்பதாக எம்பிக்கள் தெரிவித்தனர். முதல்வருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவிக்குமாறு கனிமொழியிடம் தெரிவித்தனர். குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல உடல்நலனிலும் தமிழக அரசு அக்கறை செலுத்துகிறது என ஷியாம் சிங் பாராட்டினார். பின்னர் நெல்பேட்டை பகுதியில் உள்ள சமையல் அறை கூடத்திலும் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வந்த எம்பிக்கள் தரிசனம் முடித்துக் கொண்ட நிலையில் எம்பிக்கள் அருகே இருந்த வளையல் கடைகளுக்கு சென்றனர். அதில் பெண் எம்பி கீதாபென்வா தனக்கும் மற்ற ஆண் எம்பிக்கள் தங்கள் மனைவிகளுக்கும் வளையல் வாங்க விரும்பினர். அவர்கள் கேட்கும் வளையலை கடைக்காரரிடம் தமிழில் பேசி கனிமொழி எம்பி வாங்கிக் கொடுத்தார்.
இவர்கள் வளையல் வாங்குவதை கோயிலுக்கு சென்ற பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். இந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார், அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வரவேற்று அழைத்துச் சென்றார்.
கடந்த 20ஆம் தேதி மதுரை வலையங்குளத்தில் நடந்த அதிமுக மாநாடு சிறப்பாக நடந்து முடிந்ததை அடுத்து மீனாட்சி அம்மனை சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications