கிளறிய நிர்மலா! சான்சை மிஸ் பண்ணாத எடப்பாடி! கண்ணீர் விட்ட ஜெயலலிதா! அதிமுக மாநாட்டில் கவனிச்சீங்களா
மதுரை: மதுரையில் நடக்கும் அதிமுக எழுச்சி பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதற்கு பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது.

இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திமுகவினருக்கு பதில் அளித்து பேசினார். அதில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; ரூ 1627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது; மத்திய அரசின் கடனுதவி திட்டம்- தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை; அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம். பொதுவாக 750 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன; ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பு பற்றி திமுகவினர் பேசலாமா? மகாபாரத கதைகளை இவர்கள் சொல்லலாம்? தமிழக சட்டசபையில் திமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்ததை மறக்க முடியுமா? திமுகவினர் ஜெயலலலிதாவை அவமதித்ததை மறக்க முடியுமா?, என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
பதில் அளித்தார்: இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தார். அதில், கனிமொழி கூறிய பிறகு தான் நிர்மலா சீதாராமன் சிலப்பதிகாரத்தின் முன்னுரையை படிக்க ஆரம்பித்துள்ளார். அவர் முழுமையாக படிக்க வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு ஓய்வு கிடைக்கும். அதன்பிறகு கண்டிப்பாக முழுமையாக படிக்க வேண்டும்.
நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் எழுதிய புத்தகத்தில் மீண்டும் பாஜக வந்தால் நாட்டுக்கு நல்லது இல்லை என குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில் இந்தி, சமஸ்கிருதத்தை படிக்க விடாமல் தடுத்ததாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் சேலையை இழுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் சேலையை இழுத்ததாக நிர்மலா சீதாராமன் கூறும் வேளையில் மணிப்பூரில் ஆடைகளை களைந்து இழுத்து வரப்பட்ட பெண்கள் பற்றி அவருக்கு ஏன் கண்ணீர் வரவில்லை?, என்று கேட்டார்.

எடப்பாடி : இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் அதிமுக மதுரை மாநாட்டில் ஜெயலலிதாவின் கண்ணீர் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மீது திமுகவினர் சட்டசபையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நாளில் கலைந்த முடியோடு, சோகமான முகத்தோடு ஜெயலலிதா சட்டசபைக்கு வெளியே வந்த புகைப்படம் இந்த மாநாட்டில் காட்சி படுத்தப்பட்டு உள்ளது.
மதுரை மாநாட்டில் அதிமுகவின் வரலாறு தொடர்பான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அதிமுகவின் 51 ஆண்டு வரலாற்றில் எடுக்கப்பட்ட முக்கியமான புகைப்படங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ஒரு புகைப்படமாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட அதே நிகழ்வின் புகைப்படம் இங்கே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
அதிமுக மாநாடு: அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அங்கே 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் மலர் தூவ கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடக்கிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications