மதுரை ஜல்லிக்கட்டு.. காளைகளுக்கு தகுதிச்சான்று அவசியம்.. நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க கலப்பின மாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தை திருநாள் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் முதன்முதலாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
அந்த மனுவில், நாட்டு மாடுகளுக்குப் பெரிய திமில் இருக்கும் என்பதால், அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்குத் திமில் இருப்பதில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில், நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழக கலாச்சாரப் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும், 2017-ல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளத் தடையில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் எனக் கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க உடல் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் காளைகளின் உரிமையாளர்கள் தங்களது காளைகளுடன் அந்தந்த பகுதி கால்நடை மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கால்நடை மருத்துவரிடம் உடல் தகுதி சான்றிதழ் பெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாள சான்றுக்கு விண்ணப்பிக்க இன்று அறிவிப்பு வெளியானது. கால்நடைத்துறை சார்பில் வெளியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காளைகளை பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாடு திமில் தெரியும் வகையில் மாடு உரிமையாளர், உதவியாளர் புகைப்படத்துடன் விணணப்பம் தர வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க கலப்பின மாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு போதை வஸ்துகள் தரமாட்டேன், துன்புறுத்த மாட்டேன் என உறுதிமொழி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்றும், விழாவுக்கான பரிசுப் பொருட்கள் வசூல் விவரங்களை மாவட்ட நிர்வாக்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் மதுரை அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு பரிசுப் பொருட்கள் வசூல் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் விழாக் குழுவினர் ஒப்படைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications