அருந்ததியர் வந்தேறி தெலுங்கர் என விமர்சனம்: நெல்லை, தூத்துக்குடி மதுரையில் சீமான் கொடும்பாவி எரிப்பு
மதுரை, நெல்லையில் சீமான் கொடும்பாவி இன்று எரிக்கப்பட்டது.
மதுரை: அருந்ததியர் ஜாதியினரை வந்தேறி தெலுங்கர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக பேசியதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு தொடருகிறது. சீமானின் கொடும்பாவியை மதுரை, நெல்லையில் அருந்ததியர் ஜாதியினர் இன்று எரித்து போராட்டம் நடத்தினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். மேனகாவை ஆதரித்து பிரசாரம் செய்த சீமான் ஜாதிய அடிப்படையில் வாக்கு சேகரித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் ஜாதி வாக்குகள் கணிசமாக உள்ளன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா முதலியார் ஜாதியை சேர்ந்தவர். அதனால் முதலியார் என்ற பெயருக்கு புது விளக்கம் கொடுத்து பிரசாரம் செய்தார் சீமான்.

மேலும், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.. அந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு தெரியுமா? என பேசினார் சீமான்.
அத்துடன் இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார். அதாவது அருந்ததியர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்து குடியேற்றப்பட்ட வந்தேறிகள் என சீமான் குறிப்பிட்டார்.

சீமானின் இந்த பேச்சுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிக்க முடியாத அளவுக்கு அருந்ததியர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சீமானைக் கண்டித்து சாலை மறியல், போராட்டங்களை தமிழ்ப் புலிகள் கட்சி நடத்தியது. ஒவ்வொரு போராட்டம் நடைபெற்ற இடங்களிலும் சீமானின் கொடும்பாவிகளும் கொளுத்தப்பட்டன.

இதேபோல இன்றும் மதுரை, நெல்லை, தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. கொடும்பாவிகளை கொளுத்த விடாமல் போலீசார் தடுக்க முயற்சித்தனர். ஆனால் போலீசாரையும் மீறி சீமான் கொடும்பாவிகள் இழுத்து செல்லப்பட்டு கொளுத்தப்பட்டன.













Click it and Unblock the Notifications