ஜில் ஜில் ஜிலேபி கட்லா, அழகழகா அயிரை.. சொக்க வைக்கும் ரோகு.. மதுரையில் மக்கள் உற்சாகம்!
Recommended Video
மதுரை: மதுரை அழகர்கோவில் அருகே பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா வில் ஏராளாமான பொதுமக்கள் நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கீழகள்ளந்திரி கிராமத்தில் அனைத்து சமுதாய பெருமக்கள் கலந்து கொண்ட மீன் பிடி வினோத திருவிழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
அழகர்கோவில் அருகே கீழகள்ளந்திரி கிராமத்தில் உள்ள ஐந்து கோவில் முத்தன்சாமி கோவிலுக்கு சொந்தமான பெரியநாகினி கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மீன் குஞ்சுகள்
இந்த ஆண்டு பெரியாறு அணையிலிருந்து பாசனக் கால்வாயில் தண்ணிர் திறக்கப்பட்டு கண்மாய் நிரம்பியது. இந்நிலையில் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மீன் குஞ்சுகள் கிராமத்தின் சார்பில் கண்மாயில் வாங்கி விடப்பட்டன.
தண்டோரா அறிவிப்பு
தற்போது மீன்கள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதையடுத்து இன்று மீன்பிடி திருவிழா நடைபெறும் என சுற்று வட்டார கிராம பொது மக்களுக்கு சுவரொட்டி மூலமும் தண்டோரா மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
விதம் விதமான மீன்கள்
இதனையொட்டி இன்று மீன் பிடித்திருவிழா கண்மாயில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களான சிலேபி கட்லா, அயிரை, ரோகு உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.
திருவிழாக் கூட்டம்
அவ்வாறு பிடித்து வந்த மீன்களை இறைவனுக்கு படைத்த பின்பு பொதுமக்கள் சமைத்து சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.
துள்ளிக் குதித்து தவ்விய மீன்கள்
கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை கொடி வீசியவுடன் மீன் பிடிக்க வந்தவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கியதால் மீன்கள் துள்ளிக் குதித்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.