குட் பை காப்பர் டி: மதுரை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு சூப்பர் 'மேஜிக் குச்சி'! 3 வருஷம் நோ கவலை
மதுரை: தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் சாமானிய பெண்களுக்கும் எளிதில் சென்றடையும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பெண்களுக்கான சூப்பர் சாதனம் ஒன்று அறிமுகமாகி உள்ளது.. அது என்ன தெரியுமா?
நவீன மற்றும் எளிய கருத்தடை முறையான 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' (Implanon NXT) எனும் புதிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. மகப்பேறு கால இடைவெளியைத் திட்டமிடும் பெண்களுக்கு இது ஒரு பாதுகாப்பான மற்றும் எளிய தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..

விரிவான செய்தி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை சார்பாக, தோலுக்கு அடியில் பொருத்தப்படும் புதிய கருத்தடை சாதனமான "இம்பிளானன் என்.எக்ஸ்டி" குறித்த அறிமுகம் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது..
மாவட்ட குடும்ப நல பணிகள் இணை இயக்குநர் நடராஜன் அவர்கள் இந்த முகாமைத் தொடங்கி வைத்து, நவீன கருத்தடை முறைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்..
இந்த சாதனம் ஒரு சிறிய குச்சி போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பெண்களின் கைக்கு கீழ் தோலுக்கு அடியில் மிக எளிய முறையில் பொருத்தப்படுகிறது.. ஒருமுறை இதனை பொருத்திக் கொண்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தவித தடையுமின்றி கருத்தடை பலனைப் பெற முடியும் என்று அரசு மருத்துவர்கள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர்..
காப்பர் டி
முன்னதாக சென்னை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.. அதன் தொடர்ச்சியாக இப்போது தற்போது தென் தமிழகத்தின் முக்கிய மருத்துவ மையமான மதுரையிலும் இந்த சேவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது..
இந்த சாதனத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இது உடலில் கருத்தடைக்கான ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க செய்து இயற்கை முறையில் கருத்தரிப்பதை தடுக்கிறது.. காப்பர் டி போன்ற பழைய முறைகளில் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக குழந்தை பிறப்பு நிகழ வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆனால் இந்த புதிய இம்பிளானன் முறையில் அத்தகைய சிக்கல்கள் மிகக் குறைவு என்றும் டாக்டர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்..
மதுரை அரசு மருத்துவமனை
பயிற்சி முகாமில் கருத்தாளர்களாக பங்கேற்ற மருத்துவர்கள் எஸ்.எஸ். காயத்ரி மற்றும் பி. ஜெயந்தி பிரசாத் ஆகியோர் பேசும்போது, இந்த சாதனம் நீண்ட காலத்திற்குப் பலன் தரக்கூடியது மற்றும் மிகவும் பாதுகாப்பானது என்றனர்.. இதனைத் தோலுக்கு அடியில் பொருத்துவதும், தேவைப்படும் போது மீண்டும் அகற்றுவதும் மிக எளிமையான மருத்துவ நடைமுறையாகும்..
பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும், குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை நவீனப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்.. தினசரி மாத்திரைகள் உட்கொள்வதில் உள்ள மறதி அல்லது சிரமங்கள் இன்றி, 3 ஆண்டுகள் வரை நிம்மதியாக இருக்க இந்த சாதனம் வழிவகை செய்கிறது..
சூப்பர் சாதனம்
அரசு மருத்துவமனைகளில் இத்தகைய நவீன வசதிகள் இலவசமாகக் கிடைப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.. பெண்களின் உடல்நலம் மற்றும் குடும்ப நலனை முன்னிறுத்தித் தொடங்கப்பட்டுள்ள இந்த "இம்பிளானன் என்.எக்ஸ்டி" முறை, வரும் காலங்களில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று மருத்துவமனை நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது..
இந்த சாதனத்தை பொருத்த விரும்பும் பெண்கள் மதுரை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவை அணுகிப் பயன் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!!












Click it and Unblock the Notifications