சூறாவளி புயலா?..பேயாட்டம் ஆடிய மரங்கள்.. கொட்டித்தீர்த்த கனமழை..மதுரையில் சட்டென்று மாறிய வானிலை
மதுரை: காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில் மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. புறநகர் பகுதிகளில் மழையோடு புயல் காற்று போல வீசியதால் மரங்கள் பேயாட்டம் போட்டன. சுள்ளென்று அடித்த வெயிலை தணிக்கும் வகையில் ஜில்லென்று மழை பெய்ததால் மதுரை மாவட்டத்தில் வானிலை சட்டென்று மாறியது.
தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி விடும். அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரம் கடந்த பின்னரும் பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாத நிலையில் இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றைய தினம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மின்கம்பங்கள் பல இடங்களில் வேறோடு சாய்ந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக 15 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்று காலையில் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கான அறிகுறியே தென்படாமல் இருந்தது. பிற்பகல் நேரத்தில் வெயில் சுள்ளென்று அடித்தது.
பலத்த காற்று வீசியபடியே கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 7 முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications