செம! போதை பொருள் தடுப்பு: நாட்டிலேயே முதன்முறையாக சிறப்பு அதிகாரிகள்.. தமிழக அரசை பாராட்டிய ஐகோர்ட்!
மதுரை: போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்படி நாட்டிலேயே முதன் முறையாக சிறப்பு காவல் அதிகாரிகளை நியமித்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த நாகூர் கனி என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது வாகனத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் போதைப்பொருள் கடத்தியதாக பறிமுதல் செய்தனர். என்னுடைய வாகனத்தை விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கேள்விகளை அரசுக்கு எழுப்பியது. அதில் கஞ்சா போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவில் வழக்குகள் நீண்ட காலமாக விசாரணையில் இருப்பது ஏன்?, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நிலை என்ன? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. மேலும் இந்த வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்து விசாரணையை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியது.
மேலும், உச்சநீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு மாநில அளவில் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ஏன் எந்த மாநிலமும் அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. எனவே இந்த வழக்கில் உரிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர் செந்தில் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார். போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி, நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 49 காவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அதிகாரியாக சாம்சன் ஐபிஎஸ் உள்பட 49 காவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை படித்த ஐகோர்ட் கிளை நீதிபதி, சிறப்பு அதிகாரிகளை நியமித்த தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications