கலப்பு திருமணம் செய்ததால் ஊருக்குள் வரவிடாமல் ‘தீண்டாமை வேலி’ போட்ட மக்கள்.. ஐகோர்ட் அதிரடி ஆணை!
மதுரை: தீண்டாமை வேலி போன்ற குற்றச் சம்பவங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த இடையப்பட்டி அருகே உள்ள சித்திரசீலமநாயக்கனூரைச் சேர்ந்த சின்னமுத்து என்பவர் அண்மையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ஊருக்குள் வரக்கூடாது எனத் தடுத்துள்ளனர். மேலும், வீட்டைச் சுற்றி 4 புறமும் தீண்டாமை வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சின்னமுத்து வழக்கு தாக்கல் செய்தார். அதில், வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் தீண்டாமை வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றும், தீண்டாமை வேலியை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி இளங்கோவன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், தீண்டாமை வேலி போன்ற குற்றச் சம்பவங்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதி இளங்கோ, அப்படி தீண்டாமை வேலி அமைக்கப்பட்டிருந்தால் அந்த வேலி உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், சித்திரசீலமநாயகன் ஏதேனும் தீண்டாமை வேலி இருக்கிறதா என கரூர் ஆட்சியர், பாலவிடுதி காவல் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்து இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications