“தமிழகமே உற்றுநோக்கும் வழக்கு”- சாத்தான்குளம் தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கில் நீதிபதிகள்
மதுரை: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு ஜூன் 4 ஆம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கின்போது விசாரணைக்காக அங்குள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் போலீஸ் கஸ்டடியில் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23 ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இந்த 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்கினால், தொடர்புடைய உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, தூக்கு தண்டனை வழங்கலாமா அல்லது தண்டனையை குறைக்கலாமா என உறுதிப்படுத்த வேண்டும். தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி தமிழக அரசு தொடர்ந்த முறையீட்டில், குற்றவாளிகள் 9 பேரும் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதிகள், உங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது , உங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து, நீங்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கு கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வருகிற 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் உட்பட 9 பேரும் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், 9 பேரிடமும் வழக்கறிஞர்கள் நியமனம் செய்துள்ளீர்களா? எனக் கேட்டார். அதற்கு, அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞர் நியமித்துவிடுவோம் என பதிலளித்தனர்.
இதையடுத்து சிபிஐ மேல்முறையீடு மனுவின் நகலை குற்றவாளிகளுக்கு வழங்க பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முதல் குற்றவாளியான ஸ்ரீதர், மேல்முறையீட்டு மனுவை தயார் செய்ய 15 நாள் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்முறையீடு மனு தயாரிக்க சிறைத்துறை போதிய வசதிகளை செய்து தரும். சிறையில் அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே விடுமுறை தேவையில்லை என்றனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4 ஆம் தேதி முதல் இந்த வழக்கு தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தமிழகமே உற்றுநோக்கும் வழக்கு என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications