ஹெல்மெட் அணியாத வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்கார்கள்.. மன்னிப்பு கடிதம் வழங்க ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: ஹெல்மெட் அணியாமல் சென்றதால் வழக்கறிஞரை தாக்கி கைது செய்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட தலைமைக் காவலர்கள் இருவரும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வேலுசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் சொந்த ஊருக்கு சென்ற போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். அப்போது போலீசுக்கும் வழக்கறிஞர் வேலுச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேலுசாமியை கைது செய்தனர்.
இந்த வழக்கில் வேலுசாமிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், வழக்கறிஞர் வேலுச்சாமியை தாக்கி வாகனத்தை பறித்த விவகாரத்தில் தலைமை காவலர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். அவர்களிடம், ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக வாகனத்தை பறிமுதல் செய்ய விதியுள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் வழக்கறிஞரைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதற்காக அவர்கள் இருவரும் மன்னிப்பு கடிதம் எழுதி வழக்கறிஞரிடம் அளிக்கவும், தலா ஆயிரத்து ஒரு ரூபாயை வரைவோலையாக எடுத்துக் கொடுக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.