மாணவர்கள் கையில் பாட்டில்.. மது விற்பனைக்கே தடை விதித்துவிடுவோம்.. உஷார்.. ஹைகோர்ட் கிளை எச்சரிக்கை
மதுரை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் வீடியோக்கள் சில சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காணப்பட வேண்டும், இல்லையென்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான படங்களுடன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்த எச்சரிக்கையை நீதிபதிகள் விடுத்துள்ளனர்.
என்ன இது.. ஒரு மாதிரி நிற்கிறாங்களே! நடுரோட்டில் தள்ளாடிய இளம்பெண்.. போதையில் மிதக்கும் பஞ்சாப்
வீடியோ/புகைப்படம்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சீருடையுடன் பள்ளி மாணவர்கள்/மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பாமக உள்ளிட்டக் கட்சிகள் மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தி வரும் நிலையில் இந்த வீடியோக்கள் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. இச்சூழலில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மனு தாக்கல்
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் அதிகம் மது விற்பனை நடைபெறுகிறது. இது இலக்கு நிர்ணயித்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல நண்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை நடைபெறுவதால் இரவில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும். 21 வயதுக்கு கீழ் உள்ளோருக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் வேதனை
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இது போன்ற வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விபரங்களைத் திரட்டவும்" மனுதாரரை வலியுறுத்தினர். இந்த புகைப்படங்கள் குறித்து பேசிய நீதிபதிகள், "சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? என தெரியவில்லை" என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விற்பனைக்கு தடை
மேலும், "இதற்கான உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்" என குறிப்பிட்ட நீதிபதிகள் "அரசுத்தரப்பில் இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்" என்றும் கூறி வழக்கின் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். பண்டிகை நாட்களில் தொடர்ந்து மது விற்பனை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலக்கு நிர்ணயித்து மது விற்பனை மேற்கொள்ளப்படுவதால்தான் விற்பனை அதிகரிக்கிறது என தொடர் குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே அரசு மீது வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.