மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்.. 3 நாட்களும் டாஸ்மாக் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் 16 கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்திற்கு பின், ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டிகள், பல்வேறு மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நடத்தப்படுகிறது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு
இருப்பினும் மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். அந்த அளவிற்கு உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, வரும் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.

அவனியாபுரம்
இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம். மூன்றில் ஏதாவது ஒரு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்குபெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்பதிவு நிறைவு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், மாடுபிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் விறுவிறுப்பாக முன்பதிவு செய்துவந்தனர். இந்த நிலையில், முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியானவர்கள் டோக்கன்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விடுமுறை
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் நாளில் அசம்பாதிவிதங்கள் நடக்க கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மூன்று நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications