அடப்பாவி இப்படியுமா மோசடி! ஒரே வீட்டை பலரிடம் லீசுக்கு விடுவதாக கூறி லட்சங்களை சுருட்டிய வீட்டு ஓனர்
மதுரையில் லீசுக்கு விடுவதாக ஒரே வீட்டை சுமார் 6-க்கும் மேற்பட்டோரிடம் காட்டி பல லட்சங்கள் ஏமாற்றிய வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை: மதுரையில் லீசுக்கு விடுவதாக ஒரே வீட்டை சுமார் 6-க்கும் மேற்பட்டோரிடம் காட்டி பல லட்சங்கள் ஏமாற்றிய வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 பேர் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்த நிலையில் மோசடி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைன் மூலமாக நடைபெறும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
புது புது யுக்திகளை கையாண்டு மோசடிகள் நடப்பதால் கொஞ்சம் அசந்தாலும் நாம் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. ஆன்லைனில் வங்கிக் கணக்கு விவரங்கள் மட்டும் இல்லை.

நூதன மோசடிகள்
பொருட்களை வாங்கும்போதும் விற்கும் போதும் கூட மோசடிகள் அதிகமாக நடைபெறுகின்றன. குறிப்பாக பழைய பொருட்களை வாங்கும் போதும் விற்கும் போது இத்தகைய மோசடிகள் நடப்பதை நாம் அதிகம் காண முடிகிறது. ஓ.எல்.எக்ஸ் போன்ற இணையதளங்கள் மூலமாக பைக் உள்ளிட்டவற்றை வாங்க வந்திருப்பதாக கூறி ட்ரையல் பார்த்து வருகிறேன் என்று பைக்கோடு எஸ்கேப் ஆகி நடந்த மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.

ஒரே வீட்டை 6 பேருக்கு..
இந்தநிலையில், அதையெல்லாம் தாண்டி மதுரையில் ஒரே வீட்டை சுமார் 6 -க்கும் மேற்பட்டோரிடம் லீசுக்கு விடுவதாக கூறி பல லட்சங்கள் ஏமாற்றிய வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்த செய்தி வருமாறு: - மதுரை ஆனையூர் மலர்நகர் பகுதியை சேர்ந்தவர் புகழ் இந்திரா. இவர் தனக்கு சொந்தமான இரு வீடுகளை லீசுக்கு விடுவதாக ஓ.எல்.எக்ஸில் விளம்பரம் செய்துள்ளார். அதேபோல், வீட்டு தரகர்களிடம் லீசுக்கு விட இருப்பதாக கூறியுள்ளார்.

ஓ எல் எக்ஸில் விளம்பரம்
ஓ.எல்.எக்ஸ்சில் வீட்டின் தோற்றத்தையும் அழகாக படம் எடுத்து விளம்பரப்படுத்தியிருந்ததால் பலரும் இவரை தொடர்பு கொண்டு லீசுக்கு எடுக்க ஆர்வம் காட்டியிருக்கின்றனர். தொலைபேசி மூலம் அழைத்து பேசியவர்களை நேரில் வரவழைத்த புகழ் இந்திரா, அவர்களிடம் தனித்தனியாக பேசி வீட்டை லீசுக்கு கொடுப்பதாக கூறி ரூ.8 லட்சம் வரை வாங்கியிருக்கிறார். இப்படி சுமார் 10 பேரிடம் 50 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

சாக்கு போக்கு கூறி ஏமாற்றியுள்ளார்
வீட்டை லீசுக்கு எடுத்தவர்கள் கேட்ட போது, லீசுக்கு கொடுக்காமல் பராமரிப்பு பணி நடப்பதாக சாக்கு போக்கு கூறி ஏமாற்றிக்கொண்டே வந்திருக்கிறார். நாள்கள் கடந்து கொண்டே இருந்ததால் லீசுக்கு எடுக்க பணம் கொடுத்தவர்களுக்கும் சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட புகழ் இந்திராவை போலீசார் கைது செய்தனர்.

4 பேர் போலீசில் புகார்
இந்த சம்பவத்தில் முதல் கட்டமாக 4 பேர் புகார் அளித்த நிலையில் அடுத்தடுத்து அவர் மீது பலரும் புகார் அளித்து வருகின்றனர். இதைப் பார்த்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆன்லைனில் பொருட்களை வாங்க ஆன்லைனில் பணம் கட்டி ஏமாற்றப்படும் செய்திகளை அடிக்கடி பார்த்து இருக்கிறோம். ஆனால், சொந்த வீட்டையே லீசுக்கு விடுவதாக கூறி அரங்கேறிய வினோத மோசடி நடைபெற்றுள்ளது குறித்து மதுரையில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications