ரூ 10 லட்சம் பணம் பறித்த விவகாரம்.. மதுரை இன்ஸ்பெக்டர் வசந்தி சிக்கியது எப்படி.. பரபரப்பு தகவல்கள்
மதுரை: மதுரையில் டெய்லரிடம் ரூ 10 லட்சத்தை பறித்து சென்ற இன்ஸ்பெக்டர் வசந்தி சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் (36). டெய்லரான இவர் சொந்தமாக பைகள் விற்பனையக கம்பெனியை வைக்க முடிவு செய்திருந்தார். இதற்காக பொருட்களை கொள்முதல் செய்ய சிலரிடம் அப்படி இப்படி என ரூ 10 லட்சம் பணத்தை கடனாக வாங்கி சேர்த்தார்.
கடந்த மாதம் 5ஆம் தேதி மதுரை- தேனி ரோட்டில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் மாவுமில் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது அவர் கம்பெனியை தொடங்குவதற்காக கடனாக வாங்கிய ரூ 10 லட்சத்தையும் கையில் வைத்திரு்நதார்.

இன்ஸ்பெக்டர்
இந்த நிலையில் அந்த இடத்திற்கு மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன் மற்றும் பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் அர்ஷத்தை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ 10 லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அர்ஷத் மாவட்ட குற்ற தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் நீக்கம்
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அன்றைய தினமே வசந்தி பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார். இந்த வழக்கை தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி வசந்தி மதுரை கிளை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ரூ 2.26 லட்சம் மீட்பு
இது ஒருபுறம் இருக்க கடந்த 13 ஆம் தேதி இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரில் பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ 2.26 லட்சம் மீட்கப்பட்டது. முன்ஜாமீன் கேட்டு இருந்த வசந்தியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவரை ஏன் இன்னமும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியது.

உறவினர்கள்
இதையடுத்து வசந்தியின் செல்போன் அழைப்புகளை கண்காணித்தனர். ஆனால் இன்ஸ்பெக்டரான வசந்தி, ஒரே எண்ணை பயன்படுத்தினால் சிக்கிக் கொள்வோம் என கருதி பல எண்களை பயன்படுத்தி தனது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வந்தார். இதனால் அவரை பிடிப்பதில் போலீஸாருக்கு தொய்வு ஏற்பட்டது.

கோத்தகிரியில் கைது
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன் ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ரூ 10 லட்சம் பறிப்பு
இதையடுத்து இருவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள கிளைச்சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தற்போது வசந்தி சிக்கியது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் அர்ஷத்திடம் வசந்தி ரூ10 லட்சத்தை பறித்து சென்றுள்ளார்.

இரட்டிப்பு செய்ய முயற்சி
ஆனால் அர்ஷத் முறைகேடான வழியில் அந்த பணத்தை இரட்டிப்பு செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு வந்ததாகவும் இதை தெரிந்துதான் வசந்தி அங்கு சென்று பணத்தை பறித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைகேடான பணபரிவர்த்தனை செய்ய ரூ 10 லட்சத்தை எடுத்து வந்ததால் அர்ஷத் போலீஸில் புகார் கொடுக்க மாட்டார் என வசந்தி நம்பியுள்ளார். ஆனால் அர்ஷத்தோ போலீஸ் கண்காணிப்பாளரிடமே போய் முறையிட்டு புகார் அளித்ததால்தான் வசந்தி சிக்கியுள்ளார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications