மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள பிரபல நகைக்கடையில் பயங்கர தீ விபத்து! ஒருவர் உயிரிழப்பு!
மதுரை: மதுரையில் இயங்கி வரும் முக்கிய நகைக்கடை ஒன்றில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையில் தெற்கு மாசி வீதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அப்படி அங்கே உள்ள கடைகளில் ஒன்று ஜானகி ஜுவல்லர்ஸ்.. தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான அந்த நகைக்கடை பல ஆண்டுகளாக அங்கே இயங்கி வருகிறது.

நேற்றிரவு வழக்கம் போல ஊழியர்கள் கடையில் இருந்துள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக அந்த நகை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளே இருந்த ஊழியர்கள் பதறியபடி வெளியே ஒடி வந்துள்ளனர்.
தீ விபத்து: மேலும், இந்த தீவிபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீ அதிகமாக இருந்த நிலையில், திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம், ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கினர்.
தீ விபத்தால் அப்பகுதி முழுக்க புகை மண்டலம் சூழ்ந்தது. தீ கட்டுக்கடங்காமல் எரிந்த நிலையில், அதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சிக்கிய ஊழியர்: இந்த தீ விபத்தின் போது, 3வது மாடியில் இருக்கும் கழிறையில் மோதிலால் என்பவர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இருப்பினும் புகை அதிகளவில் இருந்ததால் அவரை மீட்கும் பணிகள் சவால் நிறைந்த ஒன்றாக மாறியது. 3 மணி நேரம் கழித்தே மோதிலால் இருந்த இடத்திற்கு தீயணைப்பு துறையினரால் செல்ல முடிந்துள்ளது.
இருப்பினும், அதற்குள் மூச்சுத்திணறல் காரணமாக மோதிலால் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கே அவரை பரிசோதனை செய்த போலீசார் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
என்ன காரணம்: மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் அருகிலேயே இருந்த இந்த நகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்துக்கு என்ன காரணம் என்பது துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications