செங்கோட்டையன் நீக்கம்! எடப்பாடி பழனிசாமியை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்! திண்டுக்கல் சீனிவாசன்
மதுரை: கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் A1 குற்றவாளி என்றால் புடிச்சு ஜெயில்ல போடுங்களேன். நாங்களா வேண்டாம்னு சொல்றோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நடந்தது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து சில விளக்கங்களை தெரிவித்திருந்தார்.

அப்போது அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமியே தற்காலிக பொதுச் செயலாளர்தான். அப்படியிருக்கும் போது அவர் என்னை நீக்க உரிமை இல்லை. 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் எனக்கு நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கியது வேதனையை தருகிறது.
இரவெல்லாம் நான் தூங்கவில்லை, அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தியூர் தொகுதியில் நான் தேர்தல் பணியாற்றாமல் திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்டதாக என் மீது எடப்பாடி பழனிசாமி அபாண்டமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தவறு, நான் திமுகவின் பி டீம் இல்லை, அவர்தான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏ1 குற்றவாளி" என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன் தெரிவித்த கருத்துகள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஏன் கொடநாடு கொலை, கொள்ளை குறித்து எதுவும் பேசவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
அவர் இருக்கும் போது நாங்கள் பேசக் கூடாது என்பதால் நாங்கள் கொடநாடு குறித்து பேசாமல் அமைதியாக இருந்தோம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் கருத்துகள் குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், "கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் ஏ1 என்றால் புடிச்சு ஜெயில்ல போடுங்களேன். நாங்களா வேண்டாம்னு சொல்றோம்.
சட்டம் இருக்கு, போலீஸ் இருக்கு. அந்த வழக்கில் அவர்தான் குற்றவாளி என்றால் சட்டப்படி அவரை கைது செய்யலாமே! திமுக அரசுதானே நடக்கிறது, திமுக ஆட்சிக்கு முன்னாடி நடந்ததுதானே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு!
உண்மையில் இந்த அரசுக்கு திராணி இருந்து சரியான சட்டங்கள் இருந்தால் ஏ1 ஆக இருப்பவரை ஏன் இன்னும் சிறையில் போடாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்? செங்கோட்டையனிடம் ஆதாரம் இருந்தால் கொடுக்க வேண்டியதுதானே!" என சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சீனிவாசன் கூறுகையில், "மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்க்க மாட்டோம். நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் சேர்த்துக்க மாட்டோம். டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்க்க ஆலோசனை நடத்துவோம்.
அதிமுகவில் ராஜாவாக இருந்த செங்கோட்டையன் தற்போது கூஜாவாகிவிட்டார். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் துரோகி டிடிவி தினகரன்.
செங்கோட்டையன் முன்னால் வந்தவர் என்பதால் அவர் தகுதி வாய்ந்த மூத்த நிர்வாகியா? எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் செங்கோட்டையன் பிறந்ததால் அவர் மூத்த நிர்வாகியாகிவிடுவாரா. எல்லா தகுதிகளும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் உண்டு.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வர வேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு. நானும் ராஜன் செல்லப்பாவும் கூட மூத்த நிர்வாகிகள்தான். ஜெயலலிதா இருக்கும் போதே செங்கோட்டையன் முதல்வராக விரும்பியவர். அதனாலேயே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications