விதிமீறல் கட்டிடங்கள் மற்றும் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுவது குறித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: விதி மீறிய கட்டடங்கள் மற்றும் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றுவது குறித்து உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படவில்லை என்ற தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்தும், உயர்மட்டக் குழுவை அமைக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். மயில்சாமி தாக்கல் செய்திருந்த மனுவில், கட்டிட அனுமதி விதிகளை மீறி மற்றும் உரிய அனுமதி இன்றி பல கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்க அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டு, விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், அரசாணையின்படி, தமிழகத்தில் விதி மீறிய கட்டடங்கள் மற்றும் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றுவது குறித்து உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படவில்லை. மேலும், விதி மீறிய கட்டடங்கள் அகற்றுவது குறித்து புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையைப் பின்பற்றும் வகையில் உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைத்து முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் " இவ்வாறு அந்த மனுவில் மயில்சாமி கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, உயர்மட்டக் குழு என்பது ஒரு விஷயத்தை நீர்த்துப் போக செய்வதுதான் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அதில் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கூட்டமும் கூடாது என்றும் தெரிவித்தார்கள். அதேநேரம் நீதிபதிகள், விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்தும், உயர்மட்டக் குழுவை அமைக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications