அலங்காநல்லூர் பிரமாண்ட அரங்கத்தில் ஜல்லிக்கட்டு.. காளைகள் பங்கேற்க வேண்டுமா? பதிவு செய்வது எப்படி?
மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இன்றும், நாளையும் முன்பதிவு செய்யலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இந்த ஜல்லிக்கட்டை காண வருவார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது மாடுபிடி வீரர்களுக்கும் , ஜல்லிக்கட்டு மாடுகளை வாடிவாசலில் விட்டு வெளியே பிடிப்பதற்கும் போதிய இடங்கள் இருந்தாலும், பார்வையாளர்கள் முறையாக அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை காணும்படி வசதி அமைந்து இருக்காது. அதனை கருத்தில் கொண்டு கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் பிரமாண்டமான முறையில், கண்கவர் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
"கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம்" என பெயரிடப்பட்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 24ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ஜல்லிக்கட்டு அரங்கத்தின் திறப்புவிழாவையொட்டி ஜனவரி 24ஆம் தேதி முதல் ஜனவரி 28 வரை 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் அங்கு நடைபெற உள்ளது . தற்போது இதற்கான முன்பதிவு விவரங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி madurai.nic.in என்ற தளத்தில் இன்று (ஜனவரி 19) நண்பகல் 12 மணி முதல் நாளை ஜனவரி 20 நண்பகல் 12 மணி வரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் உடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
உடற்தகுதிச் சான்றுடன் மாடுபிடி வீரர்களும், காளைகளின் மருத்துவச் சான்றுடன் அதன் உரிமையாளர்களும் பதிவு செய்ய வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் போட்டியாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதனைக் கொண்டே, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications