சொத்தை குறிப்பிட்ட பிள்ளைகளுக்கு மட்டும் தானம் செய்வது தொடர்பான வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
மதுரை: 38 ஆண்டுகளாக அனுபவித்த சொத்தை குறிப்பிட்ட 2 பிள்ளைகளுக்கு மட்டும் தாயார் தானமாக வழங்கியது சட்டவிரோதம் ஆகாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை சேர்ந்த ரெங்கநாயகி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பினை மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. இதுபற்றி விவரமாக பார்ப்போம்.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை சேர்ந்த ரெங்கநாயகி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எங்கள் தாயார் ஆண்டாளம்மாள் பெயரில் இருந்த 2 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. இதனை வீட்டுமனைகளாக மாற்ற தேனி நகர திட்டமிடல் உதவி இயக்குனர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இதில் விதிமீறல் உள்ளது. எனவே அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில், தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த ஆண்டாளம்மாள் என்பவருக்கு மனுதாரர் ரெங்கநாயகி மற்றும் ரேணுகா, குணசேகரன் உள்ளிட்ட வாரிசுகள் உள்ளனர். அவர், இதே பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை 1970-ம் ஆண்டில் வாங்கியுள்ளார் 38 ஆண்டுகளுக்கு பிறகு 2008-ம் ஆண்டில் அந்த சொத்தை ரேணுகா, மற்றொரு மகள் என 2 பிள்ளைகளுக்கு தானமாக பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.

2 ஏக்கர் நிலம் தொடர்பாக 2010-ம் ஆண்டில் தேனி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ரேணுகா தரப்பினருக்கு ஆதரவாக 2016-ம் ஆண்டில் தீர்ப்பு வந்தது. ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக ரெங்கநாயகி, அவருடன் பிறந்தவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. எனவே 2 ஏக்கர் நிலத்தை பொறுத்த வரை அந்த தீர்ப்புதான் இறுதியானது. இந்தநிலையில் 2022-ம் ஆண்டில் 2 ஏக்கர் நிலத்தை தனிநபருக்கு கிரையம் செய்து கொடுத்தனர்.
அதன்பேரில் அவர், நிலத்தினை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தேனி நகர திட்டமிடல் உதவி இயக்குனரிடம் விண்ணப்பித்துள்ளார். உரிய ஆவணங்களை பரிசீலித்து முறையாக ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டாளம்மாள் 38 ஆண்டுகள் அனுபவித்து வந்த சொத்தை மனப்பூர்வமாக தனது 2 பிள்ளைகளுக்கு மட்டும் தானமாக வழங்கியது சட்டவிரோதம் இல்லை. அந்த அடிப்படையில் 2 ஏக்கர் நிலத்திற்கான சட்டப்பூர்வ உரிமையானது, அதனை கிரையம் செய்தவருக்கு உண்டு. அந்த நிலத்தில் வீட்டுமனைக்கான ஒப்பதல் வழங்கியதில் விதிமீறல் இல்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.












Click it and Unblock the Notifications