இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார்... மதுரையில் கமலுக்கு எதிராக போராட்டம்
மதுரை: இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்று சர்ச்சை பேச்சுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும் என்றார். மேலும், உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும் என்றும் பேசினார்.
எந்த மதத்தையும் நான் சுதந்திரமாக விமர்சிப்பேன் என்று கூறிய கமல்ஹாசன், என் மீது கோபம் கொள்பவர்கள் ஹேராம் படத்தை பாருங்கள் என்றும் விளக்கமளித்தார்.
இந்தநிலையில், இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, பழங்காநத்ததில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் காவி கொடிகளை ஏந்தியபடி, கமல்ஹாசனுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications